திருவள்ளூர் | பெண் ஐஏஎஸ் அதிகாரி தாயாரின் ஆக்கிரமிப்பு வீட்டை அகற்றாததால் தண்டவாளத்தில் தலைவைத்து போராட முயன்ற மக்கள்

திருவள்ளூர் | பெண் ஐஏஎஸ் அதிகாரி தாயாரின் ஆக்கிரமிப்பு வீட்டை அகற்றாததால் தண்டவாளத்தில் தலைவைத்து போராட முயன்ற மக்கள்
Updated on
1 min read

திருவாலங்காடு அருகே நீர்நிலை ஆக்கிரமிப்புக் கட்டிடங்கள் அகற்றப்பட்ட நிலையில், பெண் ஐஏஎஸ் அதிகாரியின் தாயாரின் வீட்டை அகற்ற அதிகாரிகள் வராததால் வருவாய்த் துறையினர் மற்றும் ஊராட்சித் தலைவரை கிராம மக்கள் நேற்று சிறைபிடித்தனர். மேலும் தண்டாவளத்தில் தலை வைத்து போராடப்போவதாக புறப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அருகே தொழுதாவூரில் சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் வெள்ளைக்குட்டை என்ற நீர்நிலை உள்ளது. இதனை ஆக்கிரமித்து, அதே கிராமத்தைச் சேர்ந்த, பெண் ஐஏஎஸ் அதிகாரியின் தாயார் அருணோதயா, திமுகவைச் சேர்ந்த தொழுதாவூர் ஊராட்சித் தலைவர் அருள்முருகன் உட்பட 7 பேர் வீடுகள், கடை என 9 கட்டிடங்களை கட்டியுள்ளனர்.

அதனை அகற்றக்கோரி கடந்த2020-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்பேரில் தொடர்புடையவர்களுக்கு 2 முறை நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அரசிடம் செய்த மேல்முறையீடும் நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து, நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) திருத்தணி கோட்டாட்சியர் ஹசரத் பேகம் தலைமையிலான வருவாய்த் துறை அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

அதிகாரிகள் வரவில்லை

அதேநேரம் பெண் ஐஏஎஸ் அதிகாரியின் தாயார் அருணோதயாவின் 2 வீடுகளில் ஒரு வீடு மட்டுமே அகற்றப்பட்டது. மற்றொரு வீட்டையும் அகற்றக்கோரி ஆக்கிரமிப்பாளர்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இருட்டாக இருப்பதால், மறுநாள் (நேற்று) அகற்றுவதாக உறுதியளித்தனர்.

ஆனால், உறுதியளித்தபடி அடுத்த நாளான நேற்று ஆக்கிரமிப்பை அகற்ற காலை 11 மணிவரை தாசில்தார் மற்றும் கோட்டாட்சியர் வராததால் ஆத்திரம் அடைந்த மக்கள் திருவாலங்காடு ரயில் நிலைய தண்டவாளத்தில் தலை வைத்து போராட்டம் நடத்தப்போவதாக புறப்பட்டனர். அப்போது, ஏழைகளுக்கு ஒரு நீதி, பணக்காரர்களுக்கு ஒரு நீதியா எனக் கேட்டு முழக்கமிட்டனர். அத்துடன், வருவாய்த் துறையினர் மற்றும் பஞ்சாயத்து தலைவரை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தாசில்தார் வெண்ணிலா மற்றும் திருவள்ளூர் எம்எல்ஏ ராஜேந்திரன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடத்தில் நிலம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அப்போது உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in