Last Updated : 13 Oct, 2016 02:28 PM

 

Published : 13 Oct 2016 02:28 PM
Last Updated : 13 Oct 2016 02:28 PM

உப்பூரில் 1600 மெகாவாட் அனல் மின்நிலையம் அமைக்கும் பணிகள் தொடக்கம்: ரயில் பாதை அமைக்க 300 ஏக்கர் நிலம் கையகப்படுத்த முடிவு

ராமநாதபுரம் மாவட்டம், உப்பூரில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் மூலம் ரூ.12772 கோடி மதிப்பில் 1600 மெகாவாட் அனல் மின் நிலையம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. நிலக்கரி கொண்டு செல்ல ராமநாதபுரத்தில் இருந்து ரயில் பாதை அமைக்க 300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

உப்பூரில் சூப்பர் கிரிட்டிக்கல் தொழில்நுட்பம் கொண்ட தலா 800 மெகாவாட் திறன் கொண்ட 2 அனல்மின் நிலையங்கள் அமைக்கப்படும் என 2012-ம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதனடிப்படையில் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் (டான்ஜெட்கோ) திட்டம் தயாரித்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையிடம் அனுமதி பெற்றது.

அதையடுத்து உப்பூர், வளமாவூர், திருப்பாலைக்குடி ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் 227 ஏக்கர் அரசு புறம்போக்கு, 567 ஏக்கர் பட்டா நிலங்கள் கையகப்படுத்தப்பட ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதில் அரசு புறம்போக்கு நிலத்தை மின்வாரியத்திடம் ஒப்படைத்துவிட்டது. தனியார் பட்டா நிலங்களை கையகப்படுத்த அரசின் உத்தரவுக்காக மாவட்ட நிர்வாகம் காத்திருக்கிறது.

அனல்மின் திட்டம்:

ராமநாதபுரம்-புதுக்கோட்டையை இணைக்கும் கிழக்கு கடற்கரை சாலையில் அமைய உள்ள அனல் மின் நிலையங்களுக்கு தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து ரயில் மூலம் நிலக்கரி கொண்டுவரப்படும். மின் உற்பத்தி பாய்லர்களை குளிர்விக்க ராட்சத குழாய்கள் மூலம் கடல்நீர் கொண்டுவரப்படும். குளிர்வித்த நீரை மீண்டும் சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு கடலுக்குள் விடப்படும்.

இத்திட்டத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவுக்குள் பாக் ஜலசந்தி கடற்கரை அமைந்திருப்பது, 10 கி.மீ. சுற்றளவில் தேசிய பூங்காவோ, வனவிலங்கு வசிப்பிடங்களோ, வன உயிர் பாதுகாப்பிடங்களோ இல்லை என்பதால் இங்கு அனல் மின்நிலையம் அமைப்பது சாத்தியமானது.

இத்திட்டப் பணி பாய்லர் டர்பன் அமைப்பது உள்ளிட்ட முக்கிய திட்டம் (மெயின் பிளாண்ட்), ரூ.1500 கோடி மதிப்பிலான கடலில் இருந்து நீர் கொண்டு வரும் திட்டம், இதர பணிகள் என 3 கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.5580 கோடியிலான மெயின் பிளாண்ட் திட்டத்துக்கு கடந்த பிப்ரவரியில் பாரத மிகுமின் கழகம் ஒப்பந்தம் எடுத்துள்ளது.

தற்போது பெல் நிறுவனம் உப்பூர் திட்ட இடத்தில் அலுவலகம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான மின்சாரத்திற்காக துணை மின் நிலையம் அமைக்கும் பணியில் ராமநாதபுரம் டான்ஜெட்கோ ஈடுபட்டுள்ளது.

மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: இத்திட்டத்திற்கான பட்டா நிலங்கள் முழுவதும் கையகப்படுத்தி கொடுத் தால், மின்நிலையம் அமைப்பதற்கான பணி தீவிரமாக தொடங்கப்படும். இப்பணி தொடங்கியதில் இருந்து 42 மாதங்களில் மின்நிலையம் அமைக்கும் பணியை முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. ரூ.1500 கோடி மதிப்பில் கடல் நீர் கொண்டு வருவதற்கான திட்டப்பணிக்கான ஒப்பந்தம் இம்மாத இறுதியில் நடைபெற உள்ளது.

இத்திட்ட ஆய்வுக்காக ரூ. 2.50 கோடியை ரயில்வே நிர்வாகத்திடம் தமிழ்நாடு மின்வாரியம் செலுத்தி யுள்ளது. தனியார் நிறுவனம் ரயில் பாதைக்கான ஆய்வில் ஈடுபட்டுள்ளது. தற்போது ராமநாதபுரம் அருகே அச்சுந்தன்வயல் கிராமத்தில் இருந்து முதுனாள், சூரன்கோட்டை வழியாக கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி தேவிபட்டினம், திருப்பாலைக்குடி, வளமாவூர், வழியாக உப்பூர் மின்நிலையத்திற்கு செல்ல ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ரயில் பாதை கிழக்கு கடற்கரைச் சாலையை ஒட்டியே செல்லும். சுமார் 25 கி.மீ. தூர ரயில்பாதைக்காக இப்பகுதியில் 300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

ஆய்வின் முழுமையான அறிக்கை கிடைத்ததும், ரயில்வேயிடம் புதிய பாதை அமைக்க வலியு றுத்தப்படும். ரயில் பாதை அமைக்கப்பட்டுவிட்டால் எளிதாக உப்பூர் அனல் மின்நிலையத்திற்கு நிலக்கரி கொண்டு செல்லப்பட்டு, மின்உற்பத்தி தொடங்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x