Published : 06 Aug 2022 10:45 AM
Last Updated : 06 Aug 2022 10:45 AM

நீலகிரியில் தொடரும் கனமழை: மண் சரிவினால் சாலையில் உருண்ட பாறைகள் - போக்குவரத்து பாதிப்பு

உதகை: நீலகிரி மாவட்டத்தில் தொடரும் கனமழை காரணமாக மாவட்டத்திலுள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகின்றன.பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. உதகை - கூடலூர் சாலையில் ஆகாசப் பாலம் பகுதியில் ஏற்பட்ட மண் சரிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் நான்கு நாட்களாக அதி கனமழை எச்சரிக்கை விடுத்திருந்த சூழலில் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழையுடன் பலத்த காற்றும் வீசி வருகிறது. இதனால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக உதகை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடும் குளிர் நிலவுகிறது. பலத்த மழை காரணமாக கூடலூர், பந்தலூர் பகுதிகளிலிருந்து கேரள மாநிலத்துக்கான இரவு நேர போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. உதகை-கூடலூர் சாலையில் ஆகாசப்பாலம் பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட மண் சரிவு காரணமாக உதகை-கூடலூர் சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.

மண் சரிவினால் பாறைகள் சாலையில் உருண்டன. நெடுஞ்சாலை துறையினர் மண் சரிவை அகற்றியுள்ளனர். இன்று காலை லவ்டேல் பகுதியில் நீலகிரி மலை ரயில் பாதையில் மரம் விழுந்தது. தீயணைப்பு துறையினர் மரத்தை வெட்டி அகற்றினர்.

தொடர் மழை காரணமாக மாவட்டத்திலுள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. காலை 8 மணி நேர நிலவரப்படி முக்குருத்தி அணையில் மொத்த கொள்ளளவான 18 அடியை எட்டியது. அதே போல் கிளன்மார்கன் மற்றும் மாயாறு அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. பைக்காரா அணையில் 100 அடியில் 87 அடிக்கும், சாண்டிநள்ளா அணையில் 49 அடியில் 46 அடிக்கும், மேல்பவானி அணையில் 210 அடிக்கு 207 அடிக்கும், பார்சன்ஸ்வேலி அணையில் 77 அடியில் 75 அடிக்கும், போர்த்திமந்து அணையில் 130 அடிக்கு 127 அடிக்கும், அவலாஞ்சி அணையில் 171 அடிக்கு 160 அடிக்கும், எமரால்டு அணையில் 184 அடியில் 155 அடிக்கும், குந்தா அணையில் 89 அடிக்கு 88. 5 அடிக்கும், கெத்தை அணையில் 156 அடிக்கு 154 அடியும் தண்ணீர் உள்ளது.

மாவட்டத்தில் இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிக அளவாக அவலாஞ்சியில் 322 மி. மீ மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழை விவரம் வருமாறு(அளவு மி.மீரில்): தேவாலா- 50, நடுவட்டம் -35, மேல் பவானி- 198, பந்தலூர்- 137, சேரங்கோடு- 86, கூடலூர்- 35, உதகை -18.5., கிளன்மார்கன் 16, ஓவேலி -37, பாடந்தொறை-41, எமரால்டு-57, செருமுள்ளி-32, கேத்தி-7, மசினகுடி-4, கல்லட்டி-7.3, குந்தா-24, கிண்ணக்கொரை-6, பாலகொலா-36, கெத்தை-4, குன்னூர்-3, கீழ் கோத்தகிரி 10, பதிவாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x