Published : 06 Aug 2022 05:00 AM
Last Updated : 06 Aug 2022 05:00 AM

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆக. 6-ம் தேதி (இன்று) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 7, 8, 9-ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும்.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யக் கூடும்.

ஆக. 5-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 20 செ.மீ., கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 19 செ.மீ., நீலகிரிமாவட்டம் தேவாலாவில் 18 செ.மீ.,நடுவட்டத்தில் 15 செ.மீ., மேல்பவானியில் 14 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

ஆக. 6-ம் தேதி (இன்று) மன்னார்வளைகுடா பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். மத்திய கிழக்கு அரபிக் கடல், வடக்கு கர்நாடக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவேஇப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத் தப்படுகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x