Published : 06 Aug 2022 06:45 AM
Last Updated : 06 Aug 2022 06:45 AM

நீதிபதியை மாற்றக் கோரியதற்காக வருத்தம் தெரிவித்த ஓபிஎஸ் தரப்பு: அதிமுக பொதுக்குழு வழக்கை விசாரிக்க புதிய நீதிபதி நியமனம்

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் நீதிபதியை மாற்றக் கோரியதற்காக ஓபிஎஸ் தரப்பு வருத்தம் தெரிவித்தது. தனி நீதிபதியின் பரிந்துரையை ஏற்று, இந்த வழக்கை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரிப்பார் என்று தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் அம்மன் வைரமுத்து சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்தும்,பொதுக்குழுவுக்கு அனுமதி அளித்தும் தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அன்றைய தினம் காலை 9 மணிக்கு உத்தரவிட்டிருந்தார்.

இத்தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதைமீண்டும் சென்னை உயர் நீதிமன்றமே விசாரித்து 2 வாரங்களுக்குள் தீர்வு காண உத்தரவிட்டது.

அதன்படி, நீதிபதி கிருஷ்ணன்ராமசாமி முன்பு இந்த வழக்கு பட்டியலிடப்பட்ட நிலையில், வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரி ஓபிஎஸ் தரப்பில் கடிதம் கொடுக்கப்பட்டு, தலைமை நீதிபதியிடமும் முறையிடப்பட்டது.

இதையடுத்து, ஓபிஎஸ் தரப்புக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி நேற்று முன்தினம் கடும் கண்டனம்தெரிவித்தார்.

இந்நிலையில், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இந்த வழக்குநேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எச்.அரவிந்த்பாண்டியன் ஆஜராகி, நடந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்து, ‘‘தங்கள் (நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி) முன்பாகவே வாதங்களை முன்வைக்கிறோம்’’ என்றார்.

இதையடுத்து நீதிபதி தனக்கு எதிராக கொடுக்கப்பட்ட கடிதத்தை வாபஸ் பெற்று மனுவாகத் தாக்கல் செய்ய ஓபிஎஸ் தரப்புக்கு உத்தரவிட்டார். அதன்படி சிறிது நேர இடைவெளியில் அந்த கடிதத்தைதிரும்ப பெற்ற ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் அதை மனுவாக தாக்கல் செய்தனர்.

‘நானே விலகியிருப்பேன்’

அப்போது நீதிபதி, ‘‘இதுதொடர்பாக கடிதம் கொடுப்பதற்கு முன்புஎன்னிடம் நீங்கள் ஆஜராகி தெரிவித்திருந்தால், நானே இந்த வழக்கில் இருந்து விலகியிருப்பேன்’’ என்றார்.

அப்போது ஓபிஎஸ் தரப்பில், ‘‘அந்த கடிதத்தில் உங்களுக்கு எதிராக எந்தவொரு குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை. இந்த வழக்கை நீங்கள் ஏற்கெனவே 2 முறை விசாரித்துள்ளதால் புதிதாக ஒரு நீதிபதி விசாரித்தால் நன்றாக இருக்கும் என்றுதான் கோரினோம்’’ என்று தெரிவித்தனர்.

ஓபிஎஸ் தரப்பு மனுவை பதிவுசெய்துகொண்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ‘‘இந்த வழக்கை யார் விசாரிக்க வேண்டும் என்பதை தலைமை நீதிபதியே முடிவுசெய்யட்டும்’’ என்று கூறி தலைமை நீதிபதிக்கு பரிந்துரைசெய்தார். இதையடுத்து, இந்தவழக்கை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரிப்பார் என்று தலைமைநீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி அறிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x