Published : 19 Jun 2014 05:47 PM
Last Updated : 19 Jun 2014 05:47 PM

இலங்கை கடற்படையினரிடம் கைதான 46 தமிழக மீனவர்கள் சிறையில் அடைப்பு

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்தாகக் கூறி, கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 46 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 6 விசைப்படகுகளில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் 24 பேரை புதன்கிழமை இரவும், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 5 விசைப்படகுகளில் இருந்த 22 மீனவர்களை வியாழக்கிழமை அதிகாலையும் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டனர்.

மேலும் ராமேஸ்வரம் மீனவர் எமர்சன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி மூழ்கடித்தனர்.

சிறைப்பிடிக்கப்பட்ட 24 கோட்டைப் பட்டிணம் மீனவர்களை காங்கேசன் துறை கடற்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜர்படுத்தினர்.

மீனவர்களை விசாரித்த நீதிபதி ஜுலை 2 வரையிலும் நீதிமன்ற காவலில் அடைக்க உத்திரவிட்டார். இதனை தொடர்ந்து கோட்டைப் பட்டிணம் மீனவர்கள் 24 பேரும் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், 22 ராமேஸ்வரம் மீனவர்கள் தலைமன்னார் கடற்படைத் தளத்திற்கும் கொண்டு செல்லப்பட்டனர். வெள்ளிக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, ஜூன் முதல் இரண்டு வாரங்களில் மட்டும் இந்திய எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்தாக கூறி 26 விசைப்படகுகளை கைப்பற்றி, 101 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் ஜுன் 9ம் தேதியிலிருந்து காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய எழுதிய கடிதங்களைத் தொடர்ந்து, தமிழக மீனவர்களை இலங்கை அதிபர் ராஜபக்சே விடுதலை செய்ய உத்திரவிட்டார். ஆனால் இலங்கை நீதிமன்றங்கள் தமிழக மீனவர்களின் 26 விசைப்படகுகளை பறிமுதல் செய்தது.

விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் தாயகம் திரும்பிய நிலையிலும், கைப்பற்றப்பட்ட விசைப்படகுகளை விடுவிக்க வலியுறுத்தி தங்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை மீனவர்கள் தொடர்ச்சியாக நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை சென்னையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை பா.ஜ.க. அலுவலகத்தில் ராமேஸ்வரம் மீனவப் பிரநிதிகள் சந்தித்தனர். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படும் சம்பவத்திற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும், பிடிபட்ட படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மீனவப் பிரநிதிகளிடம் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மீனவர்களின் விசைப்படகுகளை திரும்ப பெறுவதற்கு மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும் என்று உறுதி அளித்ததன் பேரில் மீனவர்கள் தங்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்று திங்கட்கிழமையிலிருந்து கடலுக்குச் சென்றது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x