அமலாக்கத் துறை விசாரணை விவகாரம்: அண்ணாமலைக்கு ஐ.பெரியசாமி கண்டனம்

ஆத்தூர் அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடடம் கட்ட அடிக்கல் நாட்டிய அமைச்சர் ஐ.பெரியசாமி. 
ஆத்தூர் அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடடம் கட்ட அடிக்கல் நாட்டிய அமைச்சர் ஐ.பெரியசாமி. 
Updated on
2 min read

திண்டுக்கல்: “அமலாக்கத் துறையையும், சி.பி.ஐ.யையும் தங்கள் கையில் வைத்துக்கொண்டு தவறாகப் பயன்படுத்தி வருகிறது மத்திய அரசு” என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுலகத்திற்கு ரூ.3.45 கோடி மதிப்பீட்டில் புதிய அலுவலக கட்டிடடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று செம்பட்டி அருகே ஆத்தூர் பிரிவில் நடைபெற்றது. ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் மகேஸ்வரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி செயற்பொறியாளர் சண்முகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தட்சிணாமூர்த்தி வரவேற்றார். புதிய கட்டிட பணிகள் துவங்குவதற்கு அடிக்கல் நாட்டி கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.

தொடர்ந்து அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியது: ”தமிழகத்தில் மின் கட்டணம் உயர்ந்துள்ளது என மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் அ.தி.மு.க. கட்சியினர் கூப்பாடு போடுகின்றனர். அதிமுக ஆட்சியில் உதய்மின் திட்டத்தில் கையெழுத்து போட்டதுதான் மின்கட்டண உயர்வுக்கு காரணம்.

சுதந்திரம் வாங்கிய பின்பு உப்புவுக்கும், உணவுப் பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி., வரி போட்டது பா.ஜ.க அரசுதான்.

நீட் தேர்வை கொண்டு தமிழக மாணவ, மாணவியர்களின் மருத்துவக் கனவை அழித்த மத்திய பா.ஜ.க அரசு இப்போது தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைகளில் கியூட் தேர்வை கொண்டு வருகிறது. இதன்மூலம் தமிழக மாணவ, மாணவியர்கள் பல்கலைகளில் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, கிராமப்புற மாணவர்கள் படிப்பதற்காக காந்திகிராம கிராமிய பல்கலை துவக்கப்பட்டது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பல்கலையில் கியூட் நுழைவுத்தேர்வு கொண்டுவந்துள்ளதால் கிராமப்புற மாணவ, மாணவிகள் அங்கு சேர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை ஈடுசெய்ய திண்டுக்கல் மாவட்டத்தில் ஆறு கல்வி நிறுவனங்கள் புதிதாக துவக்கப்பட்டுள்ளது.

விவசாயத்தை மேம்படுத்த பயிர்க் கடன் வழங்கப்படுகிறது. நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு கறவைமாடுகள் வாங்கி தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள கூட்டுறவு சங்கங்களில் கடன் வழங்கப்படுகிறது.

அமலாக்கத் துறையையும், சி.பி.ஐ.,யையும் தங்கள் கையில் வைத்துக்கொண்டு தவறாக பயன்படுத்தி வருகிறது மத்திய அரசு. நீதிமன்றங்கள் இருப்பதால் தான் இந்தியாவில் இன்னும் நீதி நிலைநாட்டப்பட்டு வருகிறது.

அமைச்சர்கள் மீது அமலாக்கத் துறை அடுத்து அடுத்து விசாரிக்கும் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அமலாக்கத் துறையை வைத்துக்கொண்டு மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு பழிவாங்கும் நிலையை கையில் எடுத்தால், இலங்கை நிலைமை தான் ஏற்படும். அரசியல் லாபத்திற்காக சுயநலத்திற்காக அமலாக்கத் துறையை பயன்படுத்தக் கூடாது. மத்திய அரசு ஆணவமாகவும், அதிகாரமாகவும் செயல்பட்டால் சட்டம் அதற்கு இடம் கொடுக்காது.

கடந்த 10 ஆண்டுகளாக பிரேக் இல்லாத வண்டியாக அதிமுக ஓடியது.

தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றபின் மக்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்தியாவில் சிறந்த மாநிலமாக தமிழகத்தை முதல்வர் உயர்த்துவார்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in