Published : 03 Aug 2022 12:20 PM
Last Updated : 03 Aug 2022 12:20 PM

'விஞ்ஞான முறையில் ஊழல் செய்வது திமுகவினருக்கு கைவந்த கலை' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: "ஆவின் பால் பாக்கெட் எடை குறைந்த விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி நாட்டு மக்களுக்கு உண்மை நிலையை தெரிவிக்க வேண்டும். துறை ரீதியான விசாரணையால் நியாயம் கிடைக்காது" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு அதிமுக சார்பில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியது: " சர்க்காரியா கமிசனால் குற்றவாளி என்று அடையாளம் காட்டப்பட்டவர்கள். விஞ்ஞானப் பூர்வமாக ஊழல் செய்வது திமுகவினருக்கு கைவந்த கலை. அதிலும் குறிப்பாக பால்வளத்துறை அமைச்சர் நாசர்,விஞ்ஞானப் பூர்வமாக தங்களது முன்னோர் வழியில் பால் பாக்கெட்டில் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய பாலின் அளவைக் குறைத்து அதன்மூலம் ஆதாயம் தேடியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் ஒரு நாளைக்கு 37 லட்சம் லிட்டர் பால் விற்பனையாகிறது. அதில் தினந்தோறும் ஐந்தரை லட்சம் லிட்டரை நாசர் என்ற பூனைக்குட்டி குடித்துவிட்டது. அந்த பூனைக்குட்டி குடித்த பாலின் விலை ஒரு நாளைக்கு 2 கோடியே 40 லட்சம் ரூபாய். வருடத்திற்கு 800 கோடி ரூபாய். அரை லிட்டர் பால் பாக்கெட்டில் 75 கிராம் அளவுக்கு எடை குறைவாக உள்ளது.

ஆவின் பால் பாக்கெட் எடை குறைந்த விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி நாட்டு மக்களுக்கு உண்மை நிலையை தெரிவிக்க வேண்டும். துறை ரீதியான விசாரணை என்பது எந்த வகையிலும் நியாயம் கிடைக்கச் செய்யாது" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x