மலைப் பகுதிகளில் தொடர் மழை: குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழை  காரணமாக குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளம் கொட்டியது. குளிக்க தடை விதிக்கப்பட்டதால் வெறிச்சோடி காணப்பட்டது.
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழை காரணமாக குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளம் கொட்டியது. குளிக்க தடை விதிக்கப்பட்டதால் வெறிச்சோடி காணப்பட்டது.
Updated on
1 min read

வானிலை மையம் எச்சரித்தபடி திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நேற்று கனமழை எங்கும் பெய்யவில்லை.

திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 1-ம் தேதி முதல் நாளை (4-ம் தேதி) வரை ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன், அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. ஆட்சியர் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டன. மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் இங்கு வந்து சேர்ந்தனர். ஆனால், நேற்று அந்தளவுக்கு பெரியளவில் எங்கும் மழை பெய்யவில்லை.

நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் மூலைக்கரைப்பட்டியில் அதிகபட்சமாக 35 மி.மீ., தென்காசி மாவட்டத்தில் அதிகபட்சமாக அடவிநயினார் அணைப்பகுதியில் 54 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. திருநெல் வேலி, தென்காசி மாவட்டங்களில் அணைப் பகுதிகளிலும், பிற இடங்களிலும் பெய்த மழையளவு (மி.மீட்டரில்):

அடவிநயினார்- 54, குண்டாறு- 36, மூலைக்கரைப்பட்டி- 35, நாங்குநேரி- 26, ராமாநதி- 12, பாளையங்கோட்டை- 10, சிவகிரி- 9, ஆய்க்குடி, செங்கோட்டை மற்றும் தென்காசி- 8, அம்பாசமுத்திரம் மற்றும் கடனா அணை - 7, ராதாபுரம் மற்றும் கருப்பாநதி 6, மணிமுத்தாறு- 5.2, பாபநாசம்- 5, திருநெல்வேலி- 4.4, சேர்வலாறு- 4, கொடுமுடியாறு- 2, களக்காடு- 1.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி களில் நீடிக்கும் மழையால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 71.70 அடியாக இருந்தது. அணைக்கு 4,832 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 867 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.

சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 16 அடி உயர்ந்து 95.60 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 73.15 அடியாக இருந்தது. அணைக்கு 131 கனஅடி தண்ணீர் வருகிறது. 155 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

தென்காசி மாவட்டத்தில் அடவிநயினார் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்ந்து நேற்று 95 அடியாக இருந்தது. ராமநதி நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 81.25 அடியாக இருந்தது. இந்த அணை முழு கொள்ளளவை எட்டுவதற்கு இன்னும் 3 அடி தண்ணீர் மட்டுமே தேவை.

குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. மலைப்பகுதிகளில் தொடர் மழையால் இங்குள்ள பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in