Last Updated : 15 Oct, 2016 08:54 AM

 

Published : 15 Oct 2016 08:54 AM
Last Updated : 15 Oct 2016 08:54 AM

தேசிய அளவில் தலித் இயக்கங்களை ஒருங்கிணைக்கிறதா விசிக?- திருமாவளவன் பதில்

தேசிய அளவில் தலித் இயக்கத் தலைவர்களை அழைத்து தேசிய தலித் முன்னணி மாநாட்டை சென்னையில் வரும் நவம்பர் 12-ல் விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தவுள்ளது. இதன் மூலம் தேசிய அளவில் தலித் இயக்கங்களை ஒருங்கிணைக்கும் பணியை விசிக மேற்கொள்கிறதா என்பது தொடர்பாக அக்கட்சித் தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

தேசிய தலித் முன்னணி மாநாடு தொடர்பாக மத்திய உணவுத்துறை அமைச்சரும் லோக் ஜனசக்தி தலை வருமான ராம்விலாஸ் பாஸ்வான், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சரும், குடியரசுக் கட்சித் தலைவருமான ராம்தாஸ் அத்வாலே உள்ளிட் டோரை டெல்லியில் சந்தித்து விசிக தலைவர் திருமாவளவன் கடந்த 2 தினங்களாக ஆலோசனை நடத்தினார். இதன்படி இந்த மாநாடு சென்னையில் அடுத்த மாதம் 12-ம் தேதி நடக்கவுள்ளது.

இந்த மாநாடு குறித்து திருமாவளவன் ‘தி இந்து’வுக்கு அளித்த சிறப்பு பேட்டி:

தேசிய தலித் முன்னணி எதற்காக தொடங்கப்பட்டது, அதனால் தலித் மக்கள் அடைந்த பயன் என்ன?

தேசிய தலித் முன்னணியை 2008-ல் தொடங்கினோம். இதற்கு லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் தலைவராக உள்ளார். இந்திய குடியரசுக் கட்சித் தலைவர் ராம்தாஸ் அத்வாலே செயல் தலைவர். நான் துணைத் தலைவராக உள்ளேன். அரசியலைத் தாண்டி தலித் இயக்கங்களை ஒருங்கிணைக் கும் முயற்சியாக இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. தலித் மக்களுக்கு ஆதரவான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று குரல்கள் எழுந்தபோது அதனை முறியடித்தது எங்கள் அமைப்புதான்.

வட இந்தியாவில் நடந்து வந்த தேசிய தலித் முன்னணி மாநாட்டை சென்னையில் நடத்தக் காரணம் என்ன?

சிறப்பான காரணங்கள் என்று ஒன்றும் இல்லை. டெல்லி, மும்பை ஆகிய இடங்களில் இந்த அமைப்பின் மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த சூழலில், இந்தாண்டு மாநாட்டை பெங்களூருவில் நடத்த திட்டமிடப்பட்டது. பெங்களூரு வுக்கு பதிலாக சென்னையில் நடத்த வேண்டும் என்று நான் கோரிக்கை விடுத்தேன். ஏனென்றால் தமிழகத்தில் சாதி ஆணவ படுகொலைகளும், தலித்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் அதிகரித்துள்ளன. இதனை மத்திய குற்ற ஆவணக் காப்பக தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. எனவே, சென்னையில் மாநாட்டை நடத்தக் கோரினேன். இதன்படி சென்னையில் நடக்கும் மாநாட்டில் அகில இந்திய அளவில் உள்ள தலித் இயக்கத் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

உபி முன்னாள் முதல்வர் மாயாவதி பங்கேற்கிறாரா?

இல்லை. தேசிய தலித் முன்னணியில் இணைய அழைப்பு விடுக்கப்பட்டபோது அவர் அதை ஏற்கவில்லை.

‘பாஜக தலித் விரோத போக்கை பின்பற்றுகிறது’ என குற்றஞ்சாட்டும் நீங்கள், அக்கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள ராம்விலாஸ் பாஸ்வான், ராம்தாஸ் அத்வாலேவை வைத்து மாநாடு நடத்துவது முரணாக உள்ளதே?

தமிழகத்தில் நான் பெரியாரிய இயக்கத்தினருடனும், இடதுசாரிகளுடனும் நெருக்கமாக செயல்பட்டு வருகிறேன். என்னிடம் இழப்பதற்கு ஏதும் இல்லை.

ஆனால், பாஜக அமைச்சரவையில் உள்ள ராம்விலாஸ் பாஸ் வானுக்கும், அத்வாலேவுக்கும் தான் சிக்கல். ஆனால், அவர்களே அதை பெரிதாக நினைக்கவில்லை. ஏனென்றால் இதில் அரசியல் ஏதும் இல்லை.

அடுத்த 2 ஆண்டுகளில் மக்களவைத் தேர்தல் வரவுள்ளது. அதற்கு முன்பாக தேசிய அளவில் தலித் இயக்கங்களை ஒருங்கிணைக்கும் முன் முயற்சியாக இதனை கருதலாமா?

நிச்சயம் இல்லை. ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வோர் அரசியல் கட்சியும் ஒவ்வோர் அணியில் உள்ளன. எனவே, இவர்கள் அனைவரையும் ஒரே கோட்டில் கொண்டு வருவது சாத்தியமில்லாத காரியம். நாங்கள் மாநாடு நடத்துவதன் பின்னணியில் எந்தவொரு மறைமுக செயல்திட்டமும் இல்லை.

இது தலித்களுக்கு உள்ள சட்டங்களை பாதுகாப்பதற்கான மாநாடு மட்டுமே.

இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x