

வேலூர்: ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர ஆர்வத்துடன் இருந்த ஆம்பூர் பொறியியல் கல்லூரி மாணவரை, அந்த அமைப்பினர் எப்படி கண்டுபிடித்து தங்கள் குழுவில் இணைத்தனர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறி திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நீலிக்கொல்லை பகுதியைச் சேர்ந்த மிர் அனாஸ் அலி (22) என்பவரை மத்திய உளவுத்துறை அதிகாரிகள் குழுவினர் கடந்த 30-ம் தேதி அதிகாலை பிடித்தனர்.
பொறியியல் கல்லூரி மாணவரான அவரிடம் சுமார் 15 மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகுஅவரை ஆம்பூர் நகர போலீஸார் கைது செய்து கடந்த 31-ம் தேதி அதிகாலை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
மிர் அனாஸ் அலி, தடை செய்யப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் வலையில் சிக்கியது எப்படி என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக உளவுப்பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: கைதானமிர் அனாஸ் அலி, மேல்விஷாரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ மெக்கானிக்கல் பாடப்பிரிவில் 3-ம் ஆண்டு முடித்து இறுதியாண்டுக்கு செல்ல உள்ளார். தினசரி காலை 6.30 மணிக்கு ஆம்பூரில் இருந்து கல்லூரி பேருந்தில் செல்லும் அவர் மாலை 7 மணிக்கு வீடு திரும்புவார்.
வெளி நபர்களிடம் யாரிடம் பெரியளவு நட்பு இல்லாதவர். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆம்பூரில் தாயுடன் வசித்து வருகிறார். தந்தை துபாயில் பணிபுரிந்து வருகிறார். வீட்டுக்கு ஒரே மகன் மிர் அனாஸ் அலி.
தொடர்பு கொண்ட ஐ.எஸ்.
கரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டிலே இருந்த மிர் அனாஸ் அலி, ஐ.எஸ் இயக்கத்தில் சேருவது எப்படி என்ற யு-டியூப் தளங்கள் மற்றும் சில இணையதளங்களை தேடியுள்ளார். அடிக்கடி அந்த தளங்களுக்கு வந்து சென்றதை கண்டுபிடித்த ஐ.எஸ். அமைப்பினர் மிர் அனாஸ் அலியை அவர்களாகவே தொடர்பு கொண்டுள்ளனர். அவரது ஆர்வத்தை கண்ட ஐ.எஸ். அமைப்பினர் டெலிகிராம் செயலியில் உள்ள ஒரு குழுவில் இணைத்துள்ளனர்.
இதில், இந்தியாவின் பல்வேறுமாநிலங்களைச் சேர்ந்தவர்கள், பாகிஸ்தான், பங்களாதேஷ், காஷ்மீர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். குழுவில் ஐ.எஸ். அமைப்பின் உரையாடல்கள், சதித் திட்டங்கள் உள்ளிட்டவற்றை பகிரப்பட்டுள்ளன. குழுவின் நடவடிக்கைகளில் மிர் அனாஸ் அலி தொடர்ந்து பங்கெடுத்துள்ளார்.
மோப்பம் பிடித்தது 'ரா'
இந்த குழுவின் செயல்பாடுகளை இந்திய உளவு அமைப்பான ‘ரா’ பிரிவு சமீபத்தில் கண்டுபிடித்தனர். அந்த குழுவில் இருப்பவர்களை பட்டியலிட்டு நாடு முழுவதும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் கைது நடவடிக்கை நடைபெற்றது. இதில், ஆம்பூர் இளைஞர் கைதான தகவல் மட்டுமே முதலில் வெளியானது.
மிர் அனாஸ் அலியின் வீட்டுக்குள் சனிக்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் உள்ளூர் போலீஸார் உதவியுடன் நாங்கள் புகுந்தோம். முதலில் எங்களை அவர்கள் திருடர்கள் என்றே கருதினர். நாங்கள் யார் என்பதை கூறியதும் மிர் அனாஸ் அலி புரிந்துகொண்டு தவறு செய்துவிட்டேன் என்று கூறினார்.
ஆம்பூரில் விசாரணை நடத்தினால் இடைஞ்சலாக இருக்கும் என்பதால் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினோம்.
இந்தியாவில் மிர் அனாஸ் அலியை போன்றவர்களை ஐ.எஸ்.அமைப்பு தேடி வருகிறது. அவர்களின் வலையில் நமது இளைஞர்கள் விழக்கூடாது. மிர் அனாஸ் அலி படித்த கல்லூரியில் இருந்து ஏற்கெனவே ஒரு இளைஞர் நக்சலைட் இயக்கத்தில் இணைந்துள்ளார்.
இப்போது, மிர் அனாஸ் அலி ஐ.எஸ். இயக்கத்தின் தொடர்பில் இருந்து கைதாகியுள்ளார். அந்த கல்லூரியை நாங்கள் தொடர்ந்து கண்காணிப்பில் வைத்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.