Last Updated : 01 Aug, 2022 03:29 PM

 

Published : 01 Aug 2022 03:29 PM
Last Updated : 01 Aug 2022 03:29 PM

'என்னைப்போல் ஸ்டாலினும் ஆளுநர் தொல்லையை அனுபவிக்கிறார்' - புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி

நாராயணசாமி | கோப்புப் படம்

புதுச்சேரி: ஆளுநர் மூலம் மத்திய அரசு தரும் தொல்லையால் நானும் பாதிக்கப்பட்டேன், நான் அனுபவித்ததையே தமிழக முதல்வர் ஸ்டாலினும் அனுபவிக்கிறார் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று அவரது இல்லத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாடு முழுவதும் ராகுல் காந்தி பாதயாத்திரை நடத்த ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இதற்காக அமைக்கப்பட்ட குழுவில் புதுவை பொறுப்பாளராக நான் நியமிக்கப்பட்டுள்ளேன். இதன் முதல் கூட்டம் டெல்லியில் நடந்தது. அதில் பங்கேற்றேன். வருகிற 9ம் தேதி முதல் 15ம் தேதி வரை வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவாக நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் ஊர்வலம் நடக்கிறது.

புதுச்சேரியில் மோடி அரசின் மக்கள் விரோத செயல்கள், விலைவாசி உயர்வு, ஆட்சிக் கவிழ்ப்பு, மதக் கலவரம் ஆகியவற்றை எடுத்துச்சொல்லும் வகையில் பாதயாத்திரை நடைபெறும்.

புதுச்சேரியில் தொகுதி தோறும் குழுக்கள் அமைத்துள்ளோம். சமீபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய மோடி அரசை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். மத்திய பாஜக அரசு இரட்டை ஆட்சி முறையை கொண்டுவந்து ஜனநாயகத்திற்கு விரோதமாக செயல்படுகிறது எனக் கூறியுள்ளார்.

இதை முழுமையாக வரவேற்கிறேன். புதுச்சேரியில் என் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது, ஆளுநர் மூலமாக ஆட்சியை முடக்கினர். ஆளுநரை வைத்து தொல்லை தந்தனர். நானும் பாதிக்கப்பட்டேன். நான் அனுபவித்ததையே தமிழக முதல்வர் ஸ்டாலினும் அனுபவிக்கிறார். மாநிலங்களில் அடிமை ஆட்சி நடக்க வேண்டும் என பாஜக விரும்புகிறது. இது நீண்டகாலம் நீடிக்காது. விரைவில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை. சாவர்க்கர் தியாகி என்றுள்ளார்.

தமிழிசை சுதந்திர போராட்ட தியாகியின் குடும்பத்தை சேர்ந்தவர். தப்பித்தவறி பாஜகவில் உறுப்பினராகி, ஆளுநராகி உள்ளார். ஆர்எஸ்எஸ் இயக்கத்தை தோற்றுவித்தவர் சவர்க்கர். அவரை சுதந்திர போராட்ட தியாகியாக ஏற்க முடியாது. அந்தமான் சிறையில் இருந்தபோது, சிறையிலிருந்து வெளியே வர ஆங்கிலேயர்களுக்கு 7 மன்னிப்பு கடிதங்களை எழுதினார். இதனால் நிபந்தனையோடு அவர் விடுவிக்கப்பட்டார். வெள்ளையர்கள் ஆட்சிக்கு விசுவாசமாக இருப்பேன் என கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

எனவே அவர் சுதந்திர போராட்ட தியாகி அல்ல. சவர்க்கர் சுயசரிதையை ஆளுநர் தமிழிசை படிக்க வேண்டும். பாஜக சரித்திரத்தை மாற்ற நினைக்கிறது. இதை மக்கள் ஏற்க மாட்டார்கள். முதல்வர் ரங்கசாமி ஆட்சியில் தினந்தோறும் கொலைகள் நடக்கின்றன. கொலை நகரமாக புதுச்சேரி மாறியுள்ளது. புதுச்சேரி மக்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது.

இதே நிலை நீடித்தால் சுற்றுலா பயணிகள் வருகை கேள்விக் குறியாகிவிடும். பொருளாதாரம் வீழ்ச்சியடையும். ரங்கசாமியின் அவல ஆட்சிக்கு மக்கள் தகுந்த நேரத்தில் பாடம் புகட்டுவார்கள்." என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x