மதுரையில் இருந்து வேளாங்கண்ணிக்கு பார்வை மாற்றுத்திறனாளி தலைமையில் 180 பேர் பாதயாத்திரை

மதுரையில் இருந்து வேளாங்கண்ணிக்கு பார்வை மாற்றுத்திறனாளி தலைமையில் 180 பேர் பாதயாத்திரை
Updated on
1 min read

மதுரை: மதுரையில் இருந்து வேளாங்கண்ணிக்கு 37வது ஆண்டாக பார்வை மாற்றுத்திறனாளி தலைமையில் 180 பேர் பாதயாத்திரைக்கு புறப்பட்டனர்.

மதுரை புது சிறை வீதி மதுரை மில் காலனியில் வசிப்பவர் பாக்கியம் எனும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி. இவர் கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் ஆரம்பத்தில் 5 பேருடன் மதுரையிலிருந்து நாகை மாவட்டம் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்திற்கு பாதயாத்திரையாக புறப்பட்டார். அதன்பிறகு ஒவ்வோர் ஆண்டும் இவருடன் இணைந்து பாதயாத்திரை செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமானது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் வரை சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் பாதயாத்திரையில் கலந்து கொண்டனர். கடந்த 2 ஆண்டுகள் ஏற்பட்ட கரோனா பாதிப்பால் தற்போது இந்த ஆண்டு சுமார் 180 பேர் மட்டுமே சென்றனர்.

ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் 3வது வாரம் புதன்கிழமை இவரிடம் ஜெபமாலை அணிந்து திரளான பக்தர்கள் 40 நாட்கள் ஜெப, தவ முயற்சிகள் மேற்கொண்டு ஜூலை மாதம் கடைசி சனிக்கிழமை மதுரையிலிருந்து புறப்பட்டு ஆகஸ்ட் மாதம் முதல் வெள்ளிக்கிழமை மாலையில் வேளாங்கண்ணி சென்றடைகின்றனர்.

இந்த ஆண்டு பாதயாத்திரையாக நேற்று மதுரையிலிருந்து புறப்பட்டு வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி வெள்ளிக்கிழமை வேளாங்கண்ணி சென்றடைகின்றனர். பாதயாத்திரையாக செல்பவர்களின் குடும்பத்தினர் வேளாங்கண்ணி ஆர்ச் பகுதியில் இவர்களை வரவேற்று ஆலயம் அழைத்துச் செல்கின்றனர்.

பாதயாத்திரையாக செல்லும் யாத்ரீகர்களுக்கு 6 நாட்களும் உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகளை தன்னார்வலர் டேனியேல் பிரபாகரன் தலைமையில் பவுல், நாராயணன், சார்லஸ் ஆகியோர் செய்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in