Published : 30 Jul 2022 05:21 PM
Last Updated : 30 Jul 2022 05:21 PM

“ஆக்டோபஸ் குணத்தால் வேதாந்தா - பாக்ஸ்கான் முதலீட்டை விரட்டியடித்த திமுக அரசு” - இபிஎஸ் விமர்சனம்

சென்னை: “தமிழகத்திற்கு வரவேண்டிய சுமார் 2 லட்சத்து 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் முதலீட்டை திமுக அரசின் ஆக்டோபஸ் குணத்தால் விரட்டியடித்துள்ளது” என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்திற்கு வரவேண்டிய சுமார் 2 லட்சத்து 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் முதலீட்டை இந்த அரசு தனது ஆணவத்தாலும், அலட்சியத்தாலும், ``எங்கும் கமிஷன்; எதிலும் கமிஷன்’’ என்ற ஆக்டோபஸ் குணத்தாலும் விரட்டி அடித்துள்ளது. தமிழக மக்களின் நலனை பேணுவதற்கு பதிலாக, தன் குடும்ப நலனைக் காப்பதில் குறியாக இருக்கும் இந்த அரசினுடைய முதல்வரின் நிர்வாகத் திறமை இன்மையால் தமிழக மக்களின் நலன்கள் அடகு வைக்கப்படுவது தொடர்கதையாகி வருகின்றன.

தமிழகத்தின் தொழில் வளத்தைப் பெருக்குவதற்கு பதில் தங்கள் குடும்ப வளத்தைப் பெருக்குவதிலேயே ஆட்சியாளர்கள் கண்ணும் கருத்துமாக செயல்படுவது, மக்களை வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது. வேதாந்தா மற்றும் பாக்ஸ்கான் நிறுவனங்கள் இரண்டும் இணைந்து, தமிழகத்தில் 2 லட்சத்து 6 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய இருந்தது. இந்த திமுக அரசின் ஆட்சியாளர்கள் தங்களின் பேராசையால் இம்முதலீட்டை விரட்டியடித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

வேதாந்தா நிறுவனம் 1976 முதல் இந்தியாவில் பல்வேறு தொழில்களைச் செய்து வருகிறது. குறிப்பாக, மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இந்தியாவில் சுரங்கம், உலோக தயாரிப்புத் தொழில்களில் ஈடுபட்டு, பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகிறது. இந்நிலையில், வாகனங்களுக்குத் தேவையான "செமிகண்டக்டர்" எனும் இயந்திர
சாதன உற்பத்தி ஆலையை துவக்க வேதாந்தா நிறுவனமும், பாக்ஸ்கான் நிறுவனமும் முடிவு செய்து, இதற்காக தமிழகம் மட்டுமல்லாமல் மேலும் சில மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

ஆனால், இந்த ஆட்சியாளர்கள் விதித்த ``கரப்ஷன், கலெக்‌ஷன், கமிஷன்’’ நிபந்தனைகளால் இந்த தொழிற்சாலை மும்பைக்குச் சென்றுவிட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன. வேதாந்தா - பாக்ஸ்கான் கூட்டு நிறுவனம் மகாராஷ்டிர மாநில அரசுடன் ஒப்பந்தம் செய்து பணிகளைத் துவக்கியுள்ளது. இதன் காரணமாக, மகாராஷ்டிர மாநிலத்தில் 2 லட்சம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. மேலும், மொத்த ஜிஎஸ்டி வருவாயாக சுமார் 1 லட்சத்து 20 ஆயிம் கோடி ரூபாய் கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய இந்த முதலீடு, வேலைவாய்ப்பு மற்றும் வருவாய் இந்த ஆட்சியாளர்களின் அகோரப் பசியால் கைநழுவி போனதன் விளைவாக, தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி உள்ளது இந்த விடியா அரசு. தமிழகத்தில் முதலீடு செய்ய வரும் நிறுவனங்களுக்கு நில ஒதுக்கீடு உட்பட
இதர கட்டமைப்பு வசதிகளை செய்து தரவேண்டியது மாநில அரசின் கடமை. ஆனால், இந்த முதலீட்டில் ஆட்சியாளர்கள் தங்கள் குடும்ப ஆதாயத்தை எதிர்பார்த்ததால், தொழில் முதலீடுகள் இடம் மாறிவிட்டதாக விபரம் அறிந்த தொழிற்துறையினர் தெரிவிக்கின்றனர்.

75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு, தனியாரின் பங்களிப்பே இன்றியமையாததாக இருந்து வருகிறது. தமிழகத்தில் 30 ஆண்டுகால அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், சிறு, குறு, நடுத்தர தொழில்கள் பல வளர்ந்தன. குறிப்பாக, அம்மாவின் அரசில் எலக்ட்ரிக் வாகன தொழிற்சாலைகள் கொண்டுவரப்பட்டன. எம்.ஜி.ஆர் ஆட்சியில், தமிழக அரசின் சார்பில் கரூர் மாவட்டம், புகளூரில் மிகப் பெரிய காகித ஆலை, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் கூட்டு நிறுவனமாக டைட்டான் கைக்கடிகார தொழிற்சாலை ஆகியவையும், தொடர்ந்து புகளூர் காகித ஆலையின் விரிவாக்கமாக திருச்சி, மொண்டிப்பட்டியில் காகித அட்டை தொழிற்சாலையை ஜெயலலிதா உருவாக்கினார்.

தொடர்ந்து ஜெயலலிதா அரசில், தொழில் முதலீட்டாளர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டு முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. எங்களது சாதனைகளையும், முயற்சிகளையும், தாங்கள் செய்ததாக ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளும் பணியினை இந்த திமுக அரசு தற்போது செய்து வருகிறது. திமுக-வின் 18 ஆண்டுகால ஆட்சியில், அரசின் சார்பாக எந்தெந்த
தொழிற்சாலைகள் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்ல முடியுமா?

தவறிப்போய் ஒன்றிரண்டு தனியார் நிறுவனங்கள் தொழில் தொடங்க வந்தாலும், பேராசை பிடித்த திமுக ஆட்சியாளர்களின் பிடியில் சிக்கித் தவிக்கின்றார்கள் அல்லது ஓடிவிடுகின்றார்கள். மக்கள் நலனில் அக்கறை காட்டாத இந்த அரசு தன் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். தங்கள் சுயநலனுக்காக மக்கள் நலனை அடகு வைக்கும் இந்த ஆட்சியாளர்களை, இனியும் மக்கள் கைகட்டி வேடிக்கை பார்க்கமாட்டார்கள். அவர்கள் கொதித்தெழும் காலம் விரைவில் வரும் என்று எச்சரிக்கிறேன்.

"சிலரை சில காலம் ஏமாற்றலாம், பலரை பல காலம் ஏமாற்றலாம். எல்லே சிலரை சில காலம் ஏமாற்றலாம், பலரை பல காலம் ஏமாற்றலாம். எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற எல்லா காலமும் ஏமாற்ற முடியாது" என்பதை இந்த திமுக அரசுக்கு நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறேன்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x