Published : 30 Jul 2022 05:15 PM
Last Updated : 30 Jul 2022 05:15 PM

“வினை விதைத்தவர்கள் வினை அறுக்கும் காலம் வந்துவிட்டது” - மதுரையில் தினகரன் பேச்சு

மதுரை: “வினை விதைத்தவர்கள் வினை அறுக்கும் காலம் வந்துவிட்டது” என்று அமமுக நிறுவனர் டிடிவி தினகரன் பேசினார்.

மதுரையில் இன்று அமமுக கட்சியின் சார்பில் மதுரை புறநகர் வடக்கு, தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் அமமுக நிறுவனத் தலைவர் டிடிவி.தினகரன் பேசியது: "கன்னியாகுமரியிலிருந்து திருத்தணி, ஒசூர் வரைக்கும் 234 தொகுதியிலும் அமமுகவுக்கு கட்டமைப்பு உருவாக்கியுள்ளோம். எம்ஜிஆர், ஜெயலலிதா வகித்த தலைமைப்பதவியை ஏலம்போட்டு நிர்வாகிகளுக்கு பணம் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளார். அம்மாவால் ஆட்சி அதிகாரத்தை அனுபவித்தவர்கள் தற்போது நீதிமன்றத்தில் குடுமிப்பிடி சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

ஆட்சி அதிகாரம், பதவியிலிருந்த 4 ஆண்டுகள் மக்களின் வரிப்பணத்தை தமது வீட்டுப்பணம் போல் எடுத்து தவறான வழியில் பயன்படுத்தியதால் தற்போது புற்றீசல் போல் அவர்கள் மீது வழக்குகள் வந்து கொண்டிருக்கிறது.

தற்போது வினை விதைத்தவர்களாக பயந்து கொண்டிருக்கின்றனர். இதற்கு யார் காலையாவது பிடித்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என நினைக்கின்றனர். அதற்கு பொதுச்செயலாளர் பதவியாவது காப்பாற்றும் என நினைக்கின்றனர். கொள்ளையடித்த பணம் அவர்களுக்கு உதவி செய்யப்போவதில்லை.

முன்னாள் அமைச்சர் கரூர் விஜயபாஸ்கர் ஆரம்பித்து மன்னார்குடி காமராஜ் வரைக்கும் ஊழல் செய்ததாக எப்ஐஆர் போட்டுவிட்டனர். இவர்களது மடியில் டன் கணக்கில் கனம் இருக்கிறது. இவர்களுக்கு அம்மாவின் ஆட்சியை கொண்டுவருவது நோக்கமில்லை. தங்களை காப்பாற்றிக்கொள்ளவே அரசியல் இருக்கிறார்கள். மீண்டும் அம்மாவின் ஆட்சியை கொண்டு வரும் தகுதி அவர்களிடம் இல்லை. வினை விதைத்தவர்கள் வினை அறுக்கும் காலம் வந்துவிட்டது.

நீதி சொன்ன மதுரை மண்ணிலிருந்து சொல்கிறேன். நம்பிக்கைத் துரோகத்திற்கு மன்னிப்பே கிடையாது. அவர்கள் செய்த நம்பிக்கை துரோகத்திற்கு அவர்கள் காலத்திலேயே அதற்கு பதில் சொல்லும் நேரம் நெருங்கிவிட்டது. அம்மாவின் கட்சியை மீட்டெடுப்பதுதான் அமமுகவின் நோக்கம். அ்ம்மாவின் உண்மையான இயக்கம் அமமுகதான். அம்மாவின் இயக்கத்தை ஜனநாயக முறைப்படி மீட்டெடுக்க வேண்டும். அதற்கு குக்கர் சி்ன்னம் வெற்றி பெற வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத்தேர்தலும் சேர்ந்துவரும் என்பதுதான் எனது யூகம். தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் அமமுக கட்சியை கொண்டு செல்ல வேண்டும். ஆக.15-ல் ஸ்ரீவாரி மண்டபத்தில் அமமுக பொதுக்குழு, செயற்குழு நடைபெறவிருக்கிறது. யாருக்காகவும் எதற்காகவும் நான் பின்வாங்கப்போவதில்லை, யாரோடும் சமரசம் செய்துகொள்ளப்போவதும் இல்லை. உங்களை நம்பித்தான் எனது பயணத்தை தொடர்கிறேன். தகுதியானவர்களை கட்சி பொறுப்புகளில் நியமியுங்கள்.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் குக்கர் சின்னம் வெற்றி பெற பணியாற்ற வேண்டும். அதற்கான பணிகளை இன்றிலிருந்து தொடங்க வேண்டும்” என்று அவர் பேசினார்.

தேர்தல் பிரிவு செயலாளர் ஐ.மகேந்திரன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெயபால், தெற்கு மாவட்ட செயலாளர் ராஜலிங்கம், புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை மண்டல பொறுப்பாளர் மாணிக்கராஜ், மகளிரணி செயலாளர் வளர்மதி ஜெபராஜ், எம்ஜிஆர் மன்ற செயலாளர் ரயில்வே பரந்தாமன் உள்பட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x