Published : 30 Jul 2022 10:57 AM
Last Updated : 30 Jul 2022 10:57 AM

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் இடங்களை ஏற்படுத்துக: ராமதாஸ் 

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் இடங்களை ஏற்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1.20 லட்சம் இடங்கள் மட்டுமே உள்ள நிலையில், அவற்றுக்கு 4.07 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 2.98 லட்சம் விண்ணப்பங்கள் தகுதியானவை. கடந்த ஆண்டை விட கூடுதலாக 70 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருக்கின்றனர்.

கரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், பலருக்கு தனியார் கல்லூரிகளில் சேர வசதி இல்லை. அவர்கள் அரசு கல்லூரிகளில் சேர விரும்புவதும், அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருப்பதும் தான் விண்ணப்பங்கள் அதிகரிக்கக் காரணம் ஆகும்.

பொருளாதார வசதியற்றவர்களுக்கு அரசு கல்லூரிகளில் இடம் மறுக்கப்பட்டால், அவர்களால் கண்டிப்பாக உயர்கல்வி கற்க முடியாது. இது உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் நோக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். அது தீர்வல்ல.

அரசுக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களை குறைந்தது 50% அதிகரிக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் கட்டமைப்புகளையும், ஆசிரியர் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும். அதன் மூலம் அதிக எண்ணிக்கையில் ஏழை மாணவர்கள் அரசு கல்லூரிகளில் சேர்வது உறுதி செய்யப்பட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x