

அண்ணா நகரில் தொழில் அதிபர் வீட்டில் நகை, பணம் திருடப்பட்ட வழக்கில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கார் டிரைவர் நண்பருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்ணா நகரை சேர்ந்தவர் விஜயகுமார் (54). தொழில் அதிப ரான இவர் பெரும்புதூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் ஒன்றை நிர்வகித்து வருகிறார். கடந்த ஜூலை 9-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் அருகில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந் தார். திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே இருந்த 75 சவரன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி, ரூ.8.6 லட்சம் ரொக்கம், வெளியே நின்றிருந்த கார் ஆகியவை திருடப்பட்டிருந்தன.
இதுகுறித்து விஜயகுமார் அண்ணாநகர் காவல் நிலையத் தில் புகார் தெரிவித்தார். போலீ ஸார் குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைத்தனர்.
இதில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது விஜயகுமார் வீட்டில் தற்காலிகமாக கார் டிரைவராக வேலை செய்து வந்த கடலூர் மாவட்டம் விருதங்கநல்லூரைச் சேர்ந்த இளங்கோ (33) மற்றும் அவரது நண்பரும் அதே மாவட்டத்தை சேர்ந்தவருமான சண்முகசுந்தரம் என்ற சண்முகம் (25) என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இருவரையும் போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 65 சவரன், 1.5 கிலோ வெள்ளி, ரூ.2 லட்சம், கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.