Published : 30 Sep 2016 12:43 PM
Last Updated : 30 Sep 2016 12:43 PM

மதுரை மாநகராட்சி திமுக வேட்பாளர்களில் மு.க.அழகிரியின் முன்னாள் ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு: சீட் கிடைக்காத சிலர் சுயேச்சையாக மனு

மதுரை மாநகராட்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் 88 பேர் பட்டியலில் மு.க.அழகிரியின் முன்னாள் ஆதரவாளர்கள் பலருக்கு வாய்ப்பு அளிக்கப் பட்டுள்ளது. அதே நேரத்தில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டோர் உட்பட பலர் சுயேட்சையாக மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

மதுரை மாநகராட்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. 100 வார்டுகளில் 7,9,12,40,56,75,97 ஆகிய 7 வார்டுகள் காங்கிரசிற்கும், 5, 86 ஆகிய வார்டுகள் மனிதநேய மக்கள் கட்சிக்கும், 50-வது வார்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. 17, 65 வார்டுகளைத் தவிர 88 வார்டுகளுக்கு நேற்று பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்த பட்டியலில் கட்சியினருக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு குறித்து திமுக நிர்வாகி ஒருவர் கூறியது:

மதுரை மாநகராட்சியில் திமுக சார்பில் தற்போது 13 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் ஜீவானந்தம் சமீபத்தில் அதிமுகவில் இணைந்தார். முபாரக் மந்திரி, எம்.எல்.ராஜ் ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் அருண்குமார், செங்கிஸ்கான், சசிக்குமார், மாணிக் கம், ராஜேஸ்வரி, நன்னா ஆகிய 9 பேருக்கு சீட் கிடைக்கவில்லை. அதேநேரம், சசிக்குமார், மாணிக்கம் உள்பட சிலரின் உறவினர்களுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கண்ணன், போஸ் முத்தையா, விஜயலட்சுமி, தங்கம் தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கு மீண்டும் சீட் வழங்கப்பட்டுள்ளது.

அழகிரியின் தீவிர ஆதரவா ளர்களாக இருந்து முதலில் மு.க.ஸ்டாலினுடன் சென்ற ஜெயராமன், மிசா பாண்டியன், மூவேந்திரன், எஸ்ஆர் கோபி யின் சகோதரர் போஸ் முத்தையா, வி.கே.குருசாமி, மாணிக்கம் ஆகியோர் அல்லது இவர்களின் உறவினர்களுக்கு சீட் கிடைத்துள்ளது.

முன்னாள் மேயர் சின்னசாமியின் மகன், மேயர் வேட்பாளராக போட்டியிட்ட பாக்கியநாதன் உள்பட பலரின் உறவினர்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம் மகன் பொன்சேது சீட் கேட்கவில்லை. பி.எஸ்.அப்துல்காதர், அபுதாகிர் உள்பட முக்கிய நிர்வாகிகள் பலருக்கு சீட் கிடைக்கவில்லை.

திமுகவில் வெற்றி பெறு வார்கள் என பெரிதும் எதிர்பார்க் கப்பட்ட பல வார்டுகள் பெண்க ளுக்கு மாற்றப்பட்டதால், நிர்வாகிகளின் உறவினர்களுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. மதுரை வடக்கு மாவட்டத்தில் 39, தெற்கு மாவட்டத்தில் 37, புறநகர் தெற்கில் 13 வார்டுகள், வடக்கில் 11 வார்டுகளில் அந்தந்த மாவட்ட செய லாளர் தலைமையிலான நிர்வாகிகளே வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளனர். கட்சி நிர்வாகிகளுக்கே சீட் வழங்கப் பட்டுள்ளது. சீட்டுக்கு போட்டி இருந்த சில வார்டுகளில் அதிருப்தி நிலவுகிறது. நகர் வடக்கு மாவட்டத்தில் சில வார்டுகளில் கடைசி நேரத்தில் பட்டியலில் செய்யப்பட்ட மாற்றம் சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அருண்குமார், நன்னா உள்ளிட்ட சிலருக்கு சீட் வழங்கப்படவில்லை. கட்சி நிர்வாகிகள் பலருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது மகிழ்சிசை ஏற்படுத்தியிருந்தாலும், சில வார்டுகளில் எதிர்பார்த்த வேட் பாளர்களுக்கு வாய்ப்பு வழங் காததால் அதிருப்தியும் காணப் படுகிறது.

முன்னாள் மண்டல தலைவர் சுயேச்சையாக மனு தாக்கல்

மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளரான முன்னாள் மண்டலத் தலைவர் இசக்கிமுத்து நேற்று 45-வது வார்டில் சுயேச்சையாக மனு தாக்கல் செய்தார். அவர் கூறுகையில், ‘திமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், வார்டு மக்களின் கோரிக்கையை ஏற்று சுயேட்சையாக போட்டியிடுகிறேன். அழகிரியிடம் கேட்டபோது, ‘எனது பெயர், படம் உள்ளிட்ட எதையும் பயன்படுத்தக்கூடாது. இதற்கு எனது ஆதரவும் இல்லை. உதயசூரியனுக்கு ஓட்டு போடாதீர்கள் என பிரச்சாரம் செய்யாதீர்கள்’ என தெளிவாகக் கூறிவிட்டார். அழகிரி உள்பட நீக்கப்பட்டவர்களை கட்சியில் சேர்த்தால் திமுக வெற்றிக்காக பாடுபடுவோம்’ என்றார். இதேப்போல் முபாரக் மந்திரி நேற்று முன்தினம் சுயேட்சையாக மனுத்தாக்கல் செய்தார். மேலும் நன்னா உள்பட சிலர் மனுத்தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x