

கரூர்: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 1800 பேர் மீது கரூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் நேற்று கரூர் பேருந்து நிலையம் அருகில் மின்சார கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் உள்ளிட்ட 1800 பேர் மீது கரூர் நகர காவல் நிலையத்தில் சட்டவிரோதமாக பொது இடத்தில் கூட்டமாக கூடுதல் மற்றும் பொதுசாலையை மறித்து இடையூறு செய்தது உள்ளிட்ட வழக்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 25ஆம் தேதி மூன்று நாட்களுக்கு முன்பு அதிமுக சார்பில் கரூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 1300 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தமிழகத்தில் உண்மையான எதிர்க்கட்சி பாரதிய ஜனதா கட்சி தான் என்று பாஜக தலைவர்கள் கூறிவரும் நிலையில், கரூரில் தமிழக அரசை கண்டித்து பிரதான எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எண்ணிக்கையை விட பாஜக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் நேற்று 1800 பேர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.