Published : 27 Jul 2022 06:34 PM
Last Updated : 27 Jul 2022 06:34 PM

பிரதமர் மோடியின் இரண்டு நாள் சென்னை பயண விவரம்

சென்னை: இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடியின் பயண திட்ட விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடக்க விழா மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இரண்டுநாள் சுற்றுப்பயணமாக நாளை தமிழகம் வருகிறார். இந்நிலையில், பிரதமர் மோடியின் பயணத்திட்டம் குறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், நாளை (ஜூலை 28) பிற்பகல் 2.20 மணிக்கு அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானம் மூலம் மாலை 4.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து மாலை 5.25 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்படும் பிரதமர் மோடி மாலை 5.45 மணிக்கு ஐஎன்எஸ் கடற்படை விமானத் தளத்திற்கு செல்கிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் பயணிக்கும் பிரதமர், மாலை 6 மணிக்கு நேரு உள் விளையாட்டரங்கத்திற்கு வருகை தருகிறார்.

நேரு உள்விளையாட்டரங்கில் மாலை 6 மணிக்கு 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, சாலை மார்க்கமாக பயணித்து, இரவு 7.50 மணிக்கு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு செல்லும் பிரதமர் அன்றிரவு ஆளுநர் மாளிகையில் தங்குகிறார்.

அடுத்தநாள் (ஜூலை 29) காலை சாலை மார்க்கமாக பயணித்து அண்ணா பல்கலைக்கழகம் செல்லும் பிரதமர், காலை 10 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறும் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக பயணிக்கும் பிரதமர் காலை 11.50 மணிக்கு சென்னை விமான நிலையம் செல்கிறார். சென்னை விமான நிலையத்திலிருந்து பிரதமர் மோடி மீண்டும் அகமாதபாத் திரும்பி செல்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x