வேலூர் | விஐடி மாணவர்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.1.02 கோடி சம்பளத்தில் வேலை
வேலூர்: விஐடி மாணவர்கள் இருவருக்கு ஆண்டுக்கு தலா ரூ.1 கோடியே 2 லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என வேந்தர் கோ.விசுவநாதன் தெரிவித்துள்ளார்.
விஐடி பல்கலையில் சர்வதேசபெரு நிறுவனங்களின் வேலைவாய்ப்பு முகாம் கடந்த 12-ம் தேதி தொடங்கியது. இதில், வேலூர் மற்றும் சென்னை,அமராவதி, போபால் மாணவர்கள் முகாமில் ஒருங்கிணைக்கப்பட்டனர். முதற்கட்ட தேர்வு முடிவுகளை விஐடிவேந்தர் கோ.விசுவநாதன் வெளியிட்டுள்ளார்.
அதில், மைக்ரோசாப்ட் நிறுவனம் 45 மாணவர்களை தேர்வு செய்துள்ளது. டி.இ.ஷா, மோர்கன் ஸ்டான்லி, ஏர் பி.என்.பி மீடியா நெட் ஆகிய நிறுவனங்களும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிஉள்ளன. மோட்டார் க்யூ என்ற நிறுவனம் கணினி அறிவியல் பிரிவு மாணவர்கள் அமித் அகர்வால், ஷ்ரதக் பரத்வாஜ் ஆகியோருக்கு ஆண்டுக்கு தலா ரூ.1 கோடியே 2 லட்சம் சம்பளத்துக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது.
தொடர்ச்சியாக பெரு நிறுவனங்களான அமேசான், டெக்சஸ் இன்ஸ்ட்ரூமென்ட், வால்மார்ட் லேப்ஸ் போன்ற நிறுவனங்கள் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றுள்ளன. 184 மாணவ, மாணவிகளுக்கு நிறுவனங்களில் தொழிற்பயிற்சி பெரும்போதே வேலைவாய்ப்புக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
அதில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 22 பேர், டி.இ.ஷாவில் 2, பிடிலிடி முதலீட்டு நிறுவனத்தில் 24, ஜே.பி மோர்கனில் 82, வெல்ஸ் பார்கோவில் 8, இன்போசிஸ் நிறுவனத்தில் 7, தி மேத்தில் 32, ஸ்னைடர் எலக்ட்ரிக்கில் 7 பேர் அடங்குவர்.
ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கும் மேல் சம்பள வேலைவாய்ப்புகள் 175 மாணவ, மாணவிகள் பெற்றுள்ளனர். நாட்டிலே முதல்முறையாக அமேசான் நிறுவனம் விஐடி மாணவர்கள் 110 பேருக்கு தொழிற்பயிற்சி வழங்கிஉள்ளது. டிசிஎஸ் நிறுவனம் நடத்திய தேசிய தகுதித் தேர்வில் 4,630 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
எம்.டெக் மற்றும் எம்சிஏ மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் கடந்த மார்ச்சில் தொடங்கியது. இதில், 88 பெரு நிறுவனங்கள், 1,204 பேருக்கு வேலை வழங்கியுள்ளன. அந்த நிறுவனங்களுக்கும் வேலை பெற்ற மாணவர்களுக்கும் விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
