ஸ்மார்ட் மீட்டருக்கு மாதக் கட்டணம் இல்லை: அமைச்சர் வி.செந்தில்பாலாஜி உறுதி

ஸ்மார்ட் மீட்டருக்கு மாதக் கட்டணம் இல்லை: அமைச்சர் வி.செந்தில்பாலாஜி உறுதி
Updated on
1 min read

கரூர்: ஸ்மார்ட் மின் மீட்டருக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

கரூரில் நேற்று நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் மாதிரி சுடர் விழிப்புணர்வுப் பேரணியை தொடங்கி வைத்த பின், அவர் கூறியது:

வீடுகளுக்கு ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்தி,அதற்கு மாதாந்திர கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தவறான கருத்து கடந்த 2 நாட்களாக சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

ஸ்மார்ட்மின் மீட்டருக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாது. ஸ்மார்ட் மின் மீட்டருக்கு மாதாந்திர கட்டணமும் இல்லை.

முந்தைய அதிமுக ஆட்சியில் ரூ.1.59 லட்சம் கோடி கடனை வைத்துச் சென்றுள்ளனர். அந்தக்கடனுக்கு ஓராண்டுக்கான வட்டி மட்டும் ரூ.16,500 கோடி.

தமிழகத்தின் சொந்த மின் தேவையில் மூன்றில் ஒரு பங்கை மட்டும் சொந்தமாக உற்பத்தி செய்து, 2 பங்கு மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கிவிட்டு, மின் மிகை மாநிலம் என பொய்யான தகவலைக் கூறி வந்துள்ளனர். நிர்வாகச் சீர்கேட்டால் மின்வாரியம் மூடும் நிலையில் இருந்தது.

மத்திய அரசின் மானியம், வங்கிக் கடன் ஆகியவற்றையும் பெற முடியவில்லை. எனவேதான், மின் கட்டணம் சீரமைக்கப்பட்டது என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in