Last Updated : 26 Jul, 2022 09:16 PM

 

Published : 26 Jul 2022 09:16 PM
Last Updated : 26 Jul 2022 09:16 PM

வீராணம் ஏரி நிரம்பியது; சென்னைக்குத் தொடர்ந்து அனுப்பி வைக்கப்படும் தண்ணீர்

முழு கொள்ளளவை எட்டியுள்ள வீராணம் ஏரி

கடலூர்: கடலூர் மாவட்டத்தின் மிகப் பெரிய நீர் ஆதாரமான வீராணம் ஏரி நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னைக்கும் தொடர்ந்து தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய நீர் ஆதாரம் ஆகும். கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதிகளாக காட்டுமன்னர்கோவில், சிதம்பரம், புவனகிரி வட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காத்து வருகிறது. அதோடு இந்த ஏரி சென்னை மாநகரின் குடிநீருக்கு முக்கிய ஆதராமாகவும் உள்ளது.

இந்த ஏரியின் நீர்மட்டம் 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம 44 ஆயிரத்து 856 ஏக்கர் நிலம் பாசனவசதி பெறுகிறது. இந்த ஏரிக்கு மேட்டூர் அணை மூலம் தண்ணீர் வரத்து இருக்கும். இந்த ஆண்டு மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டது. அதனால் வீராணம் ஏரிக்கு மேட்டூர் அணை தண்ணீர் கடந்த மாதம் கீழணையில் இருந்து வந்து சேர்ந்தது. இதனால் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. கடும் வெயில், சென்னைக்கு தொடர்ந்து தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டிரு வருவதால் ஏரியின் நீர் மட்டம் படிப்படியாக குறைந்தது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணையில் இருந்து 1.10 லட்சம் கனஅடிக்கு மேல் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இந்த தண்ணீர் காவிரி, கொள்ளிடம் ஆறு வழியாக கடலில் சென்றது. கொள்ளிடம் ஆற்றில் விடப்பட்ட மேட்டூர் தண்ணீர் கீழணைக்கு வந்தது. கீழணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் ஏரியின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்தது.

இன்று (ஜூலை.26) கீழணையில் இருந்து வடவாறு வழியாக ஏரிக்கு விநாடிக்கு 2 ஆயிரம் கன தண்ணீர் வந்ததாலும், ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் செங்கால் ஓடை வழியா காட்டாற்று தண்ணீர் விநாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் ஏரி வந்து கொண்டிருக்கிறது.

இதனால் ஏரியின் நீர்மட்டம் 47.50 அடியாக உயர்ந்து முழு கொள்ளளவை ஏட்டி நிரம்பியுள்ளது. சென்னை மாநகர் குடிநீருக்காக விநாடிக்கு 65 கனஅடி நீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. ஏரி நிரம்பியுள்ளதால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சிதம்பரம் நீர்வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபன் தலைமையில் உதவி செயற்பொறியாளர்கள் சிதம்பரம் ஞானசேகர், அணைக்கரை குமார் மற்றும் உதவிப் பொறியாளர்கள், நீர்வளத்துறை பணியாளர்கள் ஆகியோர் ஏரியின் கரைகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x