புதுச்சேரியில் விஷக் குளவிகள் கொட்டியதில் மயங்கிய 4 பள்ளி மாணவர்களுக்கு சிகிச்சை

புதுச்சேரியில் விஷக் குளவிகள் கொட்டியதில் மயங்கிய 4 பள்ளி மாணவர்களுக்கு சிகிச்சை
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரி அருகேயுள்ள பாகூரில் குளவிகள் கொட்டியதில் மயங்கிய அரசு பள்ளி மாணவர்கள் ஆறு பேர் சிகிச்சைகாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி பாகூரில் பாரதி அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியை சுற்றி அதிக அளவிலான மரங்கள் இருக்கின்றன. பள்ளி நுழைவாயில் அருகில் உள்ள மரத்தில் குளவி கூடு இருந்துள்ளது.‌ இன்று காலை பள்ளிக்குச் சென்ற மாணவர்களை விஷக் குளவிகள் தாக்கியுள்ளன.

இதில் குருவிநத்தம் பகுதியில் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவன் அன்பரசன் (வயது 15). 12ம் வகுப்பு படிக்கும் ஹரிசுதன் (வயது 17), சோரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த தீபக் (வயது 14), மணியரசன் (வயது 17), மணமேடு பகுதியைச் சேர்ந்த அபிஷேக் (வயது 14), பாகூர் பகுதி சேர்ந்த மதன் (வயது 13) ஆகிய மாணவர்களை படுகாயமடைந்தனர்.

மேலும், குளவியாள் தாக்கப்பட்ட மாணவர்கள் மயங்கினர். உடனடியாக மயங்கிய மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள் பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் 4 பேரை மட்டும் புதுச்சேரி அரசு மருத்துவனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றனர். அங்கு மாணவர்களுக்கு மருத்துவக் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது.

இதனிடையே, பள்ளிக்கு அருகே உள்ள சாலை வழியாக சென்ற பாகூரை சேர்ந்த உதயகுமார் (வயது 40) என்பவரையும் தாக்கி உள்ளது. இதேப்போல் குடியிருப்பு பாளையத்தில் 100 நாள் வேலையில் ஈடுபட்ட பெண்களையும் விஷ குளவிகள் தாக்கியது. காயம் அடைந்த பெண்கள் சிலர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in