Last Updated : 25 Jul, 2022 03:38 PM

 

Published : 25 Jul 2022 03:38 PM
Last Updated : 25 Jul 2022 03:38 PM

புதுச்சேரி | மாதாந்திர உதவித்தொகையை தாமதமின்றி தரக் கோரி மாற்றுத் திறனாளிகள் பிச்சை எடுக்கும் போராட்டம்

புதுச்சேரியில் சமூக நலத் துறை வாயிலில் மாற்றுத் திறனாளிகள் போராட்டம்.

புதுச்சேரி: புதுச்சேரியில் மாதந்தோறும் 7-ம் தேதிக்குள் தவறாமல் உதவித்தொகை தரக் கோரி, பிச்சை எடுக்கும் போராட்டத்தை மாற்றுத் திறனாளிகள் நடத்தினர்.

புதுச்சேரியில் 3500-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். அவர்களுக்கு மாதமாதம் அவரவர் வங்கிக் கணக்கில் அரசு சார்பில் உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது,
இந்நிலையில், ‘எங்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை தாமதமாக தரப்படுவதால் அவதியடைகிறோம். மாதந்தோறும் 7-ஆம் தேதிக்குள் அங்கன்வாடிகளில் வழங்கிட வேண்டும்’ என்று வலியுறுத்தி அம்பேத்கர் மாற்றுத் திறனாளிகள் புரட்சி இயக்கம் சார்பில் புதுச்சேரி சமூக நலத்துறை நுழைவுவாயில் முன்பு பிச்சையெடுக்கும் போராட்டம் நடந்தது.

போராட்டத்தில் ஈடுபட்டோர் சமூக நலத் துறை வாயிலில் அமர்ந்து பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர். இதுபற்றி போராட்டத்தில் பங்கேற்றோர் கூறுகையில், "மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகையை மாதந்தோறும் முதல் வாரத்துக்குள் தரக் கோருகிறோம். உதவித்தொகை கிடைக்காமல் கஷ்டப்படுகிறோம்.

புதுச்சேரி முதல்வர் தலைமையில் மாற்றுத் திறனாளிகள் பிரதிநிதிகள் அடங்கிய ஆலோசனை கூட்டங்கள் நடத்திட வேண்டும், மாற்றுத் திறனாளிகளின் வேலை வாய்ப்பினை முழுவதுமாக 4 சதவீதம் நிரப்பட வேண்டும். மேம்பாட்டுக் கழகத்தில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யுங்கள். மருத்துவச் சான்றிதழ் பெற அலைய வேண்டியுள்ளது. சமூக நலத் துறை அலுவலகத்தில் தர நடவடிக்கை எடுங்கள்" என்று குறிப்பிட்டனர்.

போராட்டத்துக்கு இயக்கத்தின் தலைவர் முத்துக்குமரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் பாலசுப்பிரமணியன், ராஜதுரை, செயலாளர் அந்தோணிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை செயலாளர்கள் லட்சுமணன், கார்த்திகேயன், பொருளாளர் சுவாமிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x