

சென்னை: சென்னை குடிநீர் வாரியத்தின் கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், தென் சென்னையில் பெருங்குடி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இன்று முதல் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நெம்மேலியில் நாள் ஒன்றுக்கு 110 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திறன்கொண்ட நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதன் காரணமாக கொட்டிவாக்கம், வேளச்சேரி, திருவான்மியூர், பாலவாக்கம், பெருங்குடி, சோழிங்கநல்லூர், ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை ஆகிய பகுதிகளுக்கு இன்று (ஜூலை 23) காலை 9 மணிமுதல் 25-ம் தேதி காலை 9.00 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
இதனால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வேளச்சேரி, திருவான்மியூர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் 8144930913 என்ற எண்ணுக்கும், கொட்டிவாக்கம், பாலவாக்கம் பெருங்குடி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் 8144930914 என்ற எண்ணுக்கும், ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லூர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் 8144930915 என்ற எண்ணுக்கும் தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.