பொன் மாணிக்கவேலுக்கு எதிரான புகார்: சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

பொன் மாணிக்கவேல் | கோப்புப் படம்
பொன் மாணிக்கவேல் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்த பொன் மாணிக்கவேலுக்கு எதிராக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி காதர் பாஷா கொடுத்த புகார் குறித்து சிபிஜ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சர்வதேச கடத்தல் கும்பலோடு கூட்டு சேர்ந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சாமி சிலைகளைக் கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள திருவள்ளூர் மாவட்ட டிஎஸ்பியாக இருந்த காதர்பாஷா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பழிவாங்கும் நோக்கில் தனக்கு எதிராக பொய் வழக்குப் பதிவு செய்த சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யக் கோரி டிஎஸ்பி காதர் பாஷா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், பழவலூர் சிலைக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான தீனதயாளனை தப்பிக்க வைப்பதற்காக, அவருடன் கூட்டு சேர்ந்து அதிகார ரீதியில் தன்னை பழிவாங்கும் நோக்கிலும் தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்துள்ளார். ஜாமீனில் விடுதலையான தன்னை மற்றொரு பொய் வழக்கில் சட்டவிரோதமாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்.

உயர் நீதிமன்றத்தையும், சிறப்பு நீதிமன்றத்தையும் தவறாக பயன்படுத்திய பொன் மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்க கோரி உள்துறை செயலாளருக்கும், டிஜிபிக்கும் மனு அளித்ததேன். ஆனால், அந்த மனு மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எனது புகாரின் அடிப்படையில் பொன் மாணிக்கவேல் மீது சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டுமென கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஓய்வுபெற்ற ஜஜி பொன் மாணிக்கவேல் மீதான புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார். டிஐஜி அந்தஸதுக்கு குறையாத அதிகாரி இந்த விசாரணையை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in