Published : 22 Jul 2022 01:34 PM
Last Updated : 22 Jul 2022 01:34 PM

கண்ணியமான முறையில் இறுதிச் சடங்கு நடத்துக: கள்ளக்குறிச்சி மாணவியின் பெற்றோருக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை

சென்னை: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் உடலை நாளை காலை 6 மணிக்கு பெற்றுக் கொள்வதாக மாணவியின் பெற்றோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

கண்ணியமான முறையில் இறுதிச் சடங்கு நடத்துமாறு பெற்றோருக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்திய இருந்த நிலையில், பெற்றோர் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே தனியார் பள்ளி மாணவி மரணமடைந்ததை அடுத்து, அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில் 3 அரசு மருத்துவர்கள் மற்றும் 1 ஓய்வுபெற்ற தடயவியல் நிபுணரை நியமித்து மறு உடற்கூறாய்வு நடத்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டிருந்தார்.

தங்கள் தரப்பு மருத்துவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மாணவியின் பெற்றோர் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தனர். இந்த விவகாரம் குறித்து உயர் நீதிமன்றத்தை தான் நாட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து நேற்று காலை இந்த மனுவை மாணவியின் பெற்றோர் உச்ச நீதிமன்றத்தில் இருந்து திரும்பப் பெற்றனர்.

இதையடுத்து உயர் நீதிமன்ற தனி நீதிபதி சதீஷ்குமார் முன்பு, மறு உடற்கூறாய்வு செய்யப்பட்ட மாணவியின் உடலை பெற்றோர் வாங்க மறுப்பதாகவும், இந்த விவகாரத்தை விசாரிக்க வேண்டுமென நேற்று முறையீடு செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி, உச்ச நீதிமன்ற உத்தரவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்திருந்தார். அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவியின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவு நகலை தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா தாக்கல் செய்தார். அதை முழுமையாக படித்துப்பார்த்த நீதிபதி, நீதிமன்றம் மீது நம்பிக்கை உள்ளதா? இல்லையா? என மனுதார்ர் தரப்பிடம் கேள்வி எழுப்பினார்.

அப்போது நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தடயவியல் துறையைச் சேர்ந்த செல்வக்குமாரிடம் சில விளக்கங்களை கேட்டு பெற்றுக்கொண்டார். அப்போது விளக்கம் அளித்த செல்வக்குமார், "அரசு மருத்துவர்களால் இரண்டு முறையும் உடற்கூறாய்வு செய்யப்பட்டு, இரு முறையும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இரண்டாவது முறை உடற்கூறாய்வு செய்தபோது, புதிதாக எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று விளக்கம் அளித்தார்.

அமைதியான முறையில் தீர்வு காணவும்: பின்னர் நீதிபதி, மனுதாரர் தரப்பிடம், மகளை இழந்த பெற்றோரின் மீது நீதிமன்றம் அனுதாபம் கொள்வதாகவும், அதேசமயம் நீதிமன்றம் உத்தரவிட்டும் உடலை பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏன்? என கேள்வி எழுப்பினார். ஒவ்வொரு கட்டத்திலும் பிரச்சினை ஏற்படுத்துகிறீர்கள் .அமைதியான தீர்வு காண வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதி, மகளின் உடலை வைத்து பெற்றோர் பந்தயம் கட்ட வேண்டாம் எனத் தெரிவித்தார்.

மேலும் மாணவி உடல் மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டுமென உயர் நீதிமன்றத்தில் பிறப்பித்த உத்தரவில் உச்ச நீதிமன்றம் தலையிடவில்லை என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி, ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறப் போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

வன்முறையில் பாதிக்கப்பட்டுள்ள பள்ளி மாணவர்கள் குறித்து யாரும் பேசவில்லை. இந்த வன்முறையால் கல்வி பாதிக்கப்பட்ட மாணவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். அவர்களின் கல்வியை மீட்டெடுக்க வேண்டும் என்றும் நீதிபதி கூறியபோது, அதுகுறித்து "தமிழக முதல்வர் ஆலோசித்துள்ளதாக" அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சமூக ஊடங்களுக்கு கண்டனம்: இதைத்தொடர்ந்து, மாணவியின் மரணத்தில் வேறு சிலர் ஆதாயம் தேடுவதாக குற்றம்சாட்டிய நீதிபதி, அது மனுதாரர் தரப்பிற்கு தெரியாமலேயே நடந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். மாணவி மரணம் தொடர்பாக சமூக ஊடகங்கள் முழுவதும் பொய் செய்தியை பரப்பி உள்ளனர் என்று குற்றம்சாட்டினார்.

அதன்பின்னர், உடற்கூராய்வு அறிக்கைகளை புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனையின் 3 மருத்துவர்கள் மற்றும் தடயவியல் நிபுணர் ஆகியோர் ஆய்வு செய்து ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். அறிக்கைகள் மற்றும் வீடியோ பதிவுகளை ஜிப்மர் தரப்பிடம் ஒப்படைக்க தமிழக அரசுக்கும் உத்தரவிட்டார்.

கண்ணியத்துடன் நல்லடக்கம்: பின்னர் மனுதாரர் தரப்பிடம், மாணவி இறந்து 10 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், எப்போது உடலைப் பெற்றுக் கொள்கிறீர்கள்? என்று லேள்வி எழுப்பியதுடன், உடலைப் பெற்று கண்ணியமான முறையில் இறுதிச் சடங்கு நடத்தும்படியும், மகளின் ஆன்மா இளைப்பாறட்டும் என்றும் தெரிவித்தார். மகளின் உடலை நாளை நண்பகல் 11 மணிக்குள் பெற்றுக்கொள்வீர்கள் என நம்புவதாக தெரிவித்த நீதிபதி, அவ்வாறு பெற்றுக்கொள்ளாவிட்டால் காவல் துறை சட்டப்படி இறுதிசடங்குகளை நடத்தலாம் எனவும் அறிவுறுத்தினார்.

எப்போது உடலை பெறுவீர்கள்? என மனுதாரர் தரப்பை கேட்டு தெரிவிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர் தரப்பில், மாணவியின் உடலை நாளை காலை 6 மணிக்கு பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவிக்கப்பட்டது. நாளை காலை உடலை பெற்றுக் கொண்டு, மாலைக்குள் இறுதிச் சடங்கை முடிக்க வேண்டும் எனறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x