Published : 22 Jul 2022 01:05 PM
Last Updated : 22 Jul 2022 01:05 PM

வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்பு கள்ள ஓட்டுகளை தடுக்க உதவும்: மநீம வரவேற்பு

சென்னை: ஜனநாயகத்தின் அடிநாதமான "நேர்மையான தேர்தலுக்கு" வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும் தேர்தல் சீர்திருத்தங்கள் அவசியமானது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி கூறியுள்ளது.

இது குறித்து அக்கட்சி மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ள நிலையில், தமிழகத்தில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வாக்காளர் அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளைத் தொடங்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதை மநீம வரவேற்கிறது.

இந்நடவடிக்கையானது போலி வாக்காளர்களை நீக்குவதற்கு உதவும்: கள்ள ஓட்டுகளைத் தடுக்கும்.

அதே சமயத்தில் வாக்காளரை வற்புறுத்தி ஆதார் எண்ணைப் பெறக்கூடாது, முழு சம்மதத்துடன் பெற வேண்டுமெனவும் இச்சட்டத்திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படும் என்பதை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும்.

ஜனநாயகத்தின் அடிநாதமான "நேர்மையான தேர்தலுக்கு" இதுபோன்ற தேர்தல் சீர்திருத்தங்கள் அவசியமானது. மத்திய, மாநில அரசுகள் இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். மக்கள் நீதி மய்யம் அப்பணியை தொடர்ந்து செய்யும்." என்று செந்தில் ஆறுமுகம் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x