Published : 22 Jul 2022 06:34 AM
Last Updated : 22 Jul 2022 06:34 AM

‘திருமணமாகாதவர்' என்ற சான்றிதழை சமர்ப்பித்தால் கோயில்களில் திருமணம் நடத்த அனுமதி: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

சென்னை: இ-சேவை மையத்தின் மூலம் வழங்கப்படும் 'திருமணமாகாதவர்' என்ற சான்றிதழை சமர்ப்பித்தால் கோயில்களில் திருமணம் நடத்த அனுமதி வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்து சமயஅறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கு அனுமதிபெற இதுவரை இதர சான்றிதழ்களுடன் ‘முதல் திருமண சான்றும்' கோரப்பட்டு வந்தது.

தெளிவுரை வழங்கல்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையானது முதல்திருமண சான்றுக்கு பதிலாக இ-சேவை மையங்கள் வாயிலாக வழங்கப்படும் ‘திருமணமாகாதவர்' என்ற சான்றிதழை பெற்றுக்கொள்ள தெளிவுரை வழங்கிஉள்ளது.

எனவே, இனிவரும் காலங்களில் கோயில்களில் திருமணம் நடத்தவிரும்பும் பொதுமக்கள் ‘திருமணமாகாதவர்' என சான்றிதழை இ-சேவை மையங்கள் மூலம்பெற்று சம்பந்தப்பட்ட கோயில்களில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதுகுறித்து, கோயில்களின் அலுவலர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

கோயில்களில் திருமணம் நடத்த அனுமதி வழங்குவதற்கு உரிய சான்றிதழ்களை தவிர வருவாய் துறையால் வழங்கப்படாத இதர சான்றிதழ்களை கோரினால் 044-28339999 என்ற அறநிலையத் துறையின் தலைமை அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x