Published : 07 May 2016 08:58 AM
Last Updated : 07 May 2016 08:58 AM

மதுரை, கோவை, சென்னையில் இன்று ராகுல் காந்தி பிரச்சாரம்

திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக காங் கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகிறார்.

தமிழக சட்டப்பேரவைக்கு வரும் 16-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்குப் பதிவுக்கு இன்னும் 9 நாட்களே இருக்கும் நிலையில் தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

ஒரே மேடையில் பிரச்சாரம்

இந்நிலையில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக காங்கிரஸ் அகில இந்திய துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகத்துக்கு வருகிறார். டெல்லியில் இருந்து இன்று மாலை 4 மணிக்கு மதுரைக்கு வரும் ராகுல் காந்தி, அங்கு நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இதில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்கிறார்.

பின்னர் விமானம் மூலம் மாலை 6.30 மணிக்கு கோவைக்கு செல்லும் ராகுல் காந்தி, வ.உ.சி. மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். இதில் திமுக சார்பில் அக்கட்சியின் மகளிரணி செயலாளர் கனிமொழி கலந்துகொள்கிறார்.

பின்னர் விமானம் மூலம் சென்னைக்கு வரும் அவர், இரவு 8.45 மணிக்கு மதுரவாயல் கேபிஎன் திருமண மண்டபம் அருகே உள்ள மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மதுரவாயல் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் நாசே ஆர். ராஜேஷை ஆதரித்து பேசுகிறார். இதில் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் பங்கேற்கிறார். மதுரவாயல் பொதுக்கூட்டம் முடிந்ததும் விமானம் மூலம் ராகுல் காந்தி டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x