Published : 21 Jul 2022 04:23 PM
Last Updated : 21 Jul 2022 04:23 PM

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு: உச்ச நீதிமன்ற உத்தரவை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சின்ன சேலம் பள்ளி மாணவி உடலை மறு உடற்கூறாய்வு செய்வது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நாளை (ஜூலை 22) தாக்கல் செய்ய அவரது தந்தை தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் மாணவி மரணமடைந்ததை அடுத்து, அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில் 3 அரசு மருத்துவர்கள் மற்றும் ஒரு ஓய்வுபெற்ற தடயவியல் நிபுணரை நியமித்து மறு உடற்கூராய்வு நடத்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டிருந்தார்.

தங்கள் தரப்பு மருத்துவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தை தான் நாட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்ததையடுத்து இன்று காலை வழக்கு திரும்பப் பெறப்பட்டது.

இதையடுத்து, உயர் நீதிமன்ற தனி நீதிபதி சதீஷ்குமார் முன்பு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா முறையீடு செய்தார் . அப்போது "மறு உடற்கூறாய்வு செய்யப்பட்ட மாணவியின் உடலை பெற்றோர் வாங்க மறுப்பதாகவும், உடலை வாங்க அவர்களுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து, அவசரம் கருதி விசாரிக்க வேண்டும்" என கோரிக்கை வைத்தார்.

இதனை ஏற்று நீதிபதி வழக்கை விசாரித்தபோது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "நீதிமன்றம் உத்தரவுப்படி மறு உடற்கூறாய்வு முடிக்கப்பட்ட பிறகும்கூட, மாணவியின் உடலை அவரது பெற்றோர் இன்னும் பெற்று கொள்ளவில்லை. நீதிமன்ற உத்தரவுப்படி தான் அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டன. உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கையும் மனுதாரர் வாபஸ் பெற்றுவிட்டது" என்று தெரிவித்தார்.

மாணவியின் தந்தை ராமலிங்கம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கரசுப்பு, நீதிமன்ற உத்தரவை மீறி பெற்றோர் மற்றும் வழக்கறிஞர் இல்லாமலேயே மறு உடற்கூறாய்வு செய்யப்பட்டுள்ளது. தங்கள் தரப்பு மருத்துவர்கள் கொண்டு மறு பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்ததாகவும், உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, "உச்ச நீதிமன்ற உத்தரவை நாளை தாக்கல் செய்ய மாணவியின் தந்தை ராமலிங்கம் தரப்புக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நாளைக்கு (ஜூலை 22) தள்ளிவைத்தார். அதேசமயம், ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை மறு பரிசீலினை செய்ய போவதுதில்லை என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x