Published : 20 Jul 2022 12:42 PM
Last Updated : 20 Jul 2022 12:42 PM

நீட் விலக்கு மசோதா | மத்திய அரசு எழுப்பிய 7 கேள்விகள் என்ன? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பாக மத்திய அரசு 10 கேள்விகளை எழுப்பி உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் ‘தமிழ்நாடு இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான சட்டம்’ தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆளுநர் இதை குடியரசுத் தலைவிரின் ஒப்புதலைப் பெற அனுப்பி வைத்து உள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நீட் விலக்கு மசோதா தொடர்பாக மத்திய சுகாதாரத் துறையின் கருத்துகள், தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு நேற்று மக்களவையில் தெரிவித்து இருந்தது.

இது தொடர்பாக இன்று காலை பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் நீட் மசோதா குறித்து மத்திய அரசு 7 கேள்விகளை எழுப்பி விளக்கம் கோரி உள்ளதாக கூறினார். இந்த கேள்விகளின் விவரம்:

1. இந்த மசோதாவை நிறைவேற்ற சட்டமன்றத்திற்கு உள்ள அதிகாரம்என்ன?

2. இந்த மசோதா மத்திய அரசின் அதிகார வரம்பில் வருகிறாதா?

3. தேசிய மருத்துவ ஆணைய சட்டம் உள்ளிட்ட சட்டங்களுக்கு இது முரண்பட்டு அமைந்துள்ளதா?

4. தரமான கல்வி, வெளிப்படைத் தன்மை, தேசிய தகுதி நுழைவுத் தேர்வு உள்ளிட்ட வரலாற்று சீர் திருத்தங்கள் உறுதி செய்யும் வகையில் உள்ள நீட் தேர்வுக்கு இந்த மசோதா பாதிப்பை ஏற்படுத்துமா?

5. நாட்டின் ஒற்றுமை மற்றும் இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படுத்துமா?

6. அரசியல் அமைப்பு சட்டப்படி இந்த சட்டம் செல்லத்தக்கதா?

7. தேசிய கல்வி கொள்கைக்கு முரணாக அமைந்து உள்ளதா?

இந்த 7 கேள்விகளுக்கும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x