Published : 20 Jul 2022 12:30 PM
Last Updated : 20 Jul 2022 12:30 PM

குமரி கடற்கரை பகுதியை மத்திய அரசிற்கு தாரை வார்ப்பதா? - சீமான கண்டனம்

சென்னை: "மக்கள் நலனுக்கு எதிராகக் கன்னியாகுமரி கடற்கரையிலிருந்து மத்திய அரசின் அருமணல் நிறுவனத்திற்கு (IREL) தாதுமணல் எடுக்க நிலம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " குமரி மலைகளை வெட்டி கேரளாவிற்குக் கடத்தப்படுவதை வேடிக்கை பார்க்கும் திமுக அரசு, தற்போது குமரி கடற்கரை பகுதியினை மத்திய அரசின் அருமணல் நிறுவனத்திற்கு (IREL) தாரைவார்க்க நினைப்பது மக்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகமாகும். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது கனிம வளங்களைப் பாதுகாப்பதாக வாக்குறுதி அளித்த திமுக அரசு, தொடர்ச்சியாகக் கனிமவளங்களைச் சூறையாட அனுமதியளிக்கும் கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட கடலோரப்பகுதிகளில் அரியவகைக் கனிமங்கள் பெருமளவு புதைந்து கிடக்கின்றன. நீலகிரி முதல் கன்னியாகுமரி வரையுள்ள மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து தமிழ்நாட்டு ஆறுகள் மூலம் இக்கனிமங்கள் பல லட்சம் ஆண்டுகளாகக் கடலில் சேர்க்கப்பட்டு, தென்தமிழகக் கடற்கரையில் ஒதுங்கியுள்ளன.

கடந்த 1965-ம் ஆண்டுக் குமரி மாவட்டத்தில் மணவாளக்குறிச்சியில் அணுசக்திக்குத் தேவையான தாதுப்பொருட்களைப் பிரித்தெடுப்பதற்கு அருமணல் தொழிற்சாலை மத்திய அரசால் தொடங்கப்பட்டது. அருமணல் தொழிற்சாலையில் தாதுமணலில் இருந்து அரியவகைக் கனிமங்களைப் பிரித்தெடுக்கும் நடவடிக்கையால் கதிரியக்கம் அதிகமாகிறது என இப்பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வுகள் நிறுவுகின்றன.

அதுமட்டுமின்றி, இக்கதிரியக்கம் கடற்கரை காற்றின் மூலம் சுற்றுப்புற கிராமங்களில் பரவி மக்களுக்குப் பெரும்பாதிப்பை உருவாக்குகின்றன. குறிப்பாக அப்பகுதிகளில் இதுவரை 5000-க்கும் அதிகமான மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தாதுமணல் அள்ளுவதினால் வெளிப்படும் கதிர்வீச்சுகளால் பிறக்கும் குழந்தைகள் மனநலம் குன்றியவர்களாகவும், முதுகுகட்டி, தீராத வாய்ப்புண், கழலைக் கட்டி, விழித்திரை பாதிப்பு, இதய நோய்கள் உள்ளிட்ட பல்வகை நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர். அதுமட்டுமின்றி மக்களின் மரபணுவைத் தாக்கி அடுத்த தலைமுறைக்கும் புற்றுநோயைக் கடத்தும் பெருங்கொடுமையும் நிகழ்கிறது. மேலும் கழிவு மணலால் நிலம் பாலைவனம் போலாகி, குமரி மாவட்டமே வாழத்தகுதியற்ற நிலமாக மாறிவிடும்.

மேலும், இவ்வாறு கடலோர மணலிலிருந்து தாதுப்பொருட்களைப் பிரித்தெடுத்த பிறகு கழிவுநீரையும், மணலையும் கடற்கரை பகுதியில் கொட்டுவதால் கடலின் நிறமே சிவப்பாக மாறிவிடுகிறது. கடலையொட்டி அதிக அளவில் மணல் எடுக்கப்படுவதினால் மீன் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் அழிந்து மீனவர்களின் வாழ்வாதாரமும் நாசமாகிறது. வள்ளியாற்றின் நன்னீரைத் தாதுமணலைச் சுத்தப்படுத்தப் பயன்படுத்திவிட்டு கழிவுநீரை அதே ஆற்றின் மறுபுறம் கலக்கவிடுவதால், வள்ளியாறே அழிந்து குற்றுயிரும், குலையுயிருமாகக் காட்சி அளிக்கின்றது. அதுமட்டுமின்றிக் கடல் அலைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் இயற்கையாகவே அமைந்திருக்கும் மணல் குன்றுகள் தரைமட்டமாவதால், கடல்நீர் ஊர்களில் புகுந்துவிடுவதோடு, நிலத்தடிநீர் உப்பு நீராக மாறி, குடிநீருக்காக மக்கள் அல்லாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே இருக்கும் அருமணல் ஆலையால் மக்கள் இத்தனை துன்ப துயரங்களுக்கு ஆளாகி இருக்கும் நிலையில், தற்போது மேலும் 1144 ஹெக்டர் கடற்கரை நிலங்களை அருமணல் ஆலைக்கு வழங்குவதற்கான ஒப்பந்த தரவுகளைத் திமுக அரசு கேட்டிருப்பது பேரதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

குறிப்பாகக் கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட கீழ்மிடாலம், மிடாலம், இனயம்புத்தன்துறை, ஏழுதேசம், கொல்லங்கோடு ஆகிய கிராமங்களில் வாழும் மீனவமக்களின் எதிர்ப்பையும் மீறி, அவர்களை அங்கிருந்து வெளியேற்றி, தமிழ்நாடு அரசே நிலங்களை அபகரித்துக் கொடுக்க முயல்வது, இது மக்களுக்கான அரசுதானா? என்ற கேள்வியை எழுப்புகின்றது.

கடந்த 2005-ம் ஆண்டு இதே பகுதியில் அருமணல் ஆலைக்கு தாதுமணல் சுரங்கம் தோண்ட 1700 ஏக்கர் நிலம் வேண்டுமென்று இந்திய மத்திய அரசு கோரியபோது, அப்போதைய குமரி ஆட்சியர் முறையாக ஆய்வுசெய்து, வெறும் 115 ஹக்டேர் கடற்கரை பகுதியை மட்டுமே கொடுக்க இயலும் என்று அரசுக்குப் பரிந்துரை அளித்திருக்கும் நிலையில், மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை, மாநில அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், கடலோரப் பாதுகாப்புச் சட்டம், வனத்துறை எனப் பல்வேறு துறைகளின் கட்டுப்பாட்டு விதிகளையெல்லாம் கிடப்பில் போட்டுவிட்டு, தற்போது 1144 ஹெக்டர் கடற்கரை நிலங்களை எவ்வித கட்டுப்பாடுமின்றி, ஏற்படும் பாதிப்புகள் குறித்த எவ்வித அக்கறையுமின்றி திமுக அரசு அளிக்க முன்வருவது அப்பட்டமான மக்கள் விரோதப்போக்காகும்.

மீனவ கிராமங்களைக் காலிசெய்து அருமணல் ஆலைக்குக் கொடுப்பதன் மூலம், அதானியின் துறைமுகம் அமைக்க வழிவகைச் செய்யும் மத்திய பாஜக அரசின் திட்டத்திற்கு, மாநில திமுக அரசும் துணைபோகிறதோ? என்ற சந்தேகமும் எழுகின்றது.

எனவே தமிழ்நாடு அரசு, குமரி மாவட்ட கனிமவளங்களைக் கேரளாவுக்குக் கடத்துவதைத் தடுத்து நிறுத்த தவறியதுபோல் அல்லாமல், உடனடியாக இவ்விடயத்தில் சீரிய கவனமெடுத்து, மக்கள் நலனுக்கு எதிராகக் கன்னியாகுமரி கடற்கரையிலிருந்து தாதுமணல் எடுக்க நிலம் வழங்கும் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

இல்லையேல் குமரி மாவட்டத்தில் மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்றும் எச்சரிக்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x