Last Updated : 18 Jul, 2022 07:36 AM

 

Published : 18 Jul 2022 07:36 AM
Last Updated : 18 Jul 2022 07:36 AM

சின்னசேலம் கலவரம் | “காவல்துறையின் கைகளை கட்டிப்போட்டால் இப்படித்தான்...” - குமுறும் காவல் உயரதிகாரி

சின்னசேலத்தில் தனியார் பள்ளிக்கு எதிராக போராட்டக்காரர்கள் நடத்திய வன்முறையில் தீ வைத்ததில் கொழுந்துவிட்டு எரியும் காவல் துறை வாகனம்.

சின்னசேலத்தில் நேற்று ஏற்பட்ட கலவரத்தைக் கட்டுப்படுத்தவந்த வெளிமாவட்டக் காவல்துறையினரும், போராட்டக்காரர்களின் வன்முறைக்கு இரையாயினர். அதில் காயமடைந்த காவல் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், காவல் தலைமை, போராட்டக்காரர்களை மென்மையாகக் கையாளுங்கள் என அறிவுறுத்துகின்றனர்.

எங்கள் கைகளைக் கட்டிப்போட்டு, கல்வீசித் தாக்குபவரிடம் மண்டியிட சொல்கிறார்களா எனத் தெரியவில்லை. பல போலீஸார் காயமடைந்திருக்கும் நிலையில் இனியாவது காவல்துறை தலைமை விழித்துக் கொண்டால்தான், சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கும்.

இல்லையெனில் காவல்துறையினர் இதுபோன்று அடிவாங்கிக் கொண்டுதான் இருக்கவேண்டிய நிலை உருவாகும் என்றார் ஆதங்கத்துடன்.

சம்பவ இடத்தில் டிஜிபி ஆய்வு

வன்முறை நடைபெற்ற இடங்களில் நேற்று மாலை தமிழக உள்துறை செயலாளர் பணீந்தரரெட்டி மற்றும் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் கூட்டாக ஆய்வு மேற்கொண்டனர். பள்ளி வளாகத்தினுள் சென்று, மாணவி கீழே விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படும் இடத்தை பார்வையிட்டு, அதுகுறித்து எஸ்பியிடம் கேட்டறிந்தனர்.

வன்முறையில் சேதமடை ந்த பள்ளியை அதிகாரிகளுடன் ஆய்வு செய்த
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு. படம்: எம்.சாம்ராஜ்.

பின்னர் தீ வைக்கப்பட்ட பள்ளி அறைகள், தீவைக்கப்பட்ட வாகனங்களையும் இருவரும் பார்வையிட்டனர். பின்னர் அங்கிருந்து நேரடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் வன்முறையில் காயமடைந்த காவல் துறையினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் சைலேந்திரபாபு. பின்னர் மாணவியின் உடலையும் பார்வையிட்டார். அப்போது கள்ளக்குறிச்சி ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் உடனிருந்தார்.

டிஜிபி எச்சரிக்கை

இந்த சம்பவம் தொடர்பாக சென்னையில் உளவுத்துறை மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் டிஜிபி சைலேந்திரபாபு ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் டிஜிபி கூறியதாவது: போராட்டம் என்ற பெயரில் பெரும் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். போலீஸ் அதிகாரிகள், போலீஸார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். பள்ளி, பேருந்துகளுக்கு தீ வைப்பு, போலீஸ் வாகனம் எரிப்பு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.

வன்முறையில் ஈடுபட்டவர்களை பார்த்தால், மாணவியின் உறவினர்கள்போல தெரியவில்லை. சம்பவ இடத்தில், கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் (சட்டம் - ஒழுங்கு) தலைமையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கலவரத்தில் ஈடுபட்ட அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

போராட்டத்தில் காயமடைந்த பெண் காவலர் மயங்கி விழுந்தார்.

அனைத்து வீடியோ பதிவுகளையும் வைத்து வன்முறையில் ஈடுபட்டவர்களை ஒவ்வொருவராக அடையாளம் கண்டு கைது செய்வோம். பொதுமக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும். காவல்துறை விசாரணை சிறப்பாக நடைபெற்று வருகிறது. மாணவி மரண வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு தேவை இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x