ரம்மி விளையாட்டில் ரூ.20 லட்சம் இழப்பு - துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை

காளிமுத்து
காளிமுத்து
Updated on
1 min read

கோவை: ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.20 லட்சத்தை இழந்ததால், துப்பாக்கியால் சுட்டு கோவை மாநகர காவல்துறையைச் சேர்ந்த காவலர் தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து (29). இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர். இவர், கடந்த 2013-ம் ஆண்டு இரண்டாம் நிலைக் காவலராக பணியில் சேர்ந்தார்.

கோவை சிறைச்சாலை மைதானத்தில் நடக்கும் அரசுப் பொருட்காட்சி வளாகத்தில், மாநகர காவல்துறையின் சார்பில் கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இந்த அரங்கில் காவலர் காளிமுத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டார்.

இந்நிலையில், காவலர் அரங்கில் பணியில் இருந்தபோது, நேற்றுமுன்தினம் மதியம் காளிமுத்து தனது துப்பாக்கியால் வயிற்றுப்பகுதியில் சுட்டுக் கொண்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காவலர் காளிமுத்து உயிரிழந்தார்.

காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில், காவலர் காளிமுத்து ஆன்லைன் ரம்மிவிளையாட்டுக்காக வெளியிடங்களில் கடன் வாங்கி, அத்தொகையை பயன்படுத்தி விளையாடியுள்ளார். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.20 லட்சத்துக்கு மேல் இழந்துள்ளார்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததாலும், கடனாளி ஆனதாலும் மன உளைச்சலில் இருந்த காவலர் காளிமுத்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in