சுடுமண்ணை வாயில் திணித்து கணவர் துன்புறுத்தியதாக பெண் புகார்

சுடுமண்ணை வாயில் திணித்து கணவர் துன்புறுத்தியதாக பெண் புகார்
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை முருகேசபுரத்தைச் சேர்ந்த ரமேஷ்குமார் (29). இவரது மனைவி சங்கீதா(26). இவர்களுக்கு 13.9.2007-ல் திருமணம் நடைபெற்றது. துர்காதேவி(8), ராஜதேவிகா(7), முத்துசந்தோஷ்(6) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். பழைய இரும்பு வியாபாரம் செய்துவரும் ரமேஷ்குமாருக்கும், சங்கீதாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக குடும்பத் தகராறு இருந்து வருகிறது.

கடந்த மாதம் 12-ம் தேதி தனது கணவர் தன்னை மிகவும் அடித்து, துன்புறுத்தியதாக வள்ளியூர் மகளிர் காவல்நிலையத்தில் சங்கீதா புகார் மனு அளித்தார். அதில், “ரமேஷ்குமாருக்கும் வேறு பெண்களுக்கும் தகாத உறவு இருப்பதை தட்டிக்கேட்டபோது, தன்னை அடித்து துணி இல்லாமல் தெருவில் போட்டதுடன், சுடுமண்ணை வாயில் திணித்து கொலை செய்ய முயற்சி செய்ததாக’ சங்கீதா தெரிவித்திருந்தார். ரமேஷ்குமார் மீது வள்ளியூர் மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இதனிடையே கடந்த 3 வாரங்களாக வழக்கு பதிவு செய்யாமல் போலீஸார் அலைக்கழித்ததாகவும், அதன்பின் உரிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்றும் சங்கீதா குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக வள்ளியூர் டிஎஸ்பி பாலாஜியிடம் கேட்டபோது, “சங்கீதா கொடுத்த புகாரின்பேரில் விசாரணை நடத்தப்பட்டது. சுடுமண்ணை வாயில் திணித்து துன்புறுத்தியதாகவும், துணி இல்லாமல் தெருவில் போட்டதாகவும் கூறப்படும் புகார்களில் எவ்வித உண்மையும் இல்லை. தற்போது ரமேஷ்குமார் மீது சில பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது’ என்றார் அவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in