Published : 27 May 2016 08:32 AM
Last Updated : 27 May 2016 08:32 AM

மாநிலங்களவை தேர்தல் திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் இருந்து காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு ஜூன் 11-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. மனு தாக்கல் செய்ய வரும் 31-ம் தேதி கடைசி நாளாகும்.

தற்போதுள்ள எம்எல்ஏக்கள் எண்ணிக்கையின்படி அதிமுக 4 இடங்களிலும், திமுக 2 இடங்களிலும் வெல்லும் வாய்ப்பு உள்ளது. திமுக சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் சட்டப்பேரவைச் செயலாளரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான ஏ.எம்.பி.ஜமாலுதீனிடம் நேற்று காலை 11.30 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, எம்எல்ஏக்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், அர.சக்கரபாணி, பி.கே.சேகர்பாபு, தாயகம் கவி, கு.க.செல்வம், எஸ்.ஆர்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் நிருபரகளிடம் ஸ்டாலின் கூறியதாவது:

தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் பலத்துடன் திமுக எதிர்க்கட்சியாக வந்துள்ளது. இந்த பலத்தை பயன்படுத்தி சட்டப் பேரவையில் தமிழக மக்களின் நலனுக்காக, தமிழகத்தின் பிரச்சினை களுக்காக திமுக பாடுபடும். தமிழக மக்களுக்காக சட்டப்பேரவையில் திமுகவின் குரல் ஓங்கி ஒலிக்கும்.

சட்டப்பேரவையில் எம்எல்ஏவாக பதவியேற்றபோது திமுக தலைவர் கருணாநிதி அனுபவித்த அசவுகரியங்களை அனைவரும் அறிவர். எனவே, அவர் அமர்வதற்கு ஏற்ற இருக்கை வசதியை தமிழக அரசு ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

வேட்புமனு தாக்கல் முடிந்ததும் சுமார் 30 நிமிடங்கள் திமுக எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்திய ஸ்டாலின், பகல் 1 மணிக்கு புறப்பட்டுச் சென்றார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 8 இடங்களிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஓரிடத்திலும் வெற்றி பெற்றன. திமுகவுக்கு 89 எம்எல்ஏக்கள் இருப்பதால் மாநிலங்களவைத் தேர்தலில் அக்கட்சியின் இரு வேட்பாளர்களும் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. ஆனாலும், திமுகவின் முக்கிய கூட்டணி கட்சியான காங்கிரஸ் எம்எல்ஏக்கள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யும்போது வரவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x