Published : 11 May 2016 02:26 PM
Last Updated : 11 May 2016 02:26 PM

அதிமுக எம்எல்ஏக்கள் முதல்வரிடம் பேச முடியுமா?- திருச்சி சிவா கேள்வி

`அதிமுக ஆட்சியில் தொகுதி பிரச்சினை தொடர்பாக எம்எல்ஏக்கள் முதல்வரிடம் பேச முடியுமா?’ என, திமுக கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி என்.சிவா எம்.பி. கேள்வி எழுப்பினார்.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் நடைபெற்ற திமுக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவர் பேசியதாவது:

திருச்செந்தூர் தொகுதியில் ஒரு பெரிய பிரச்சினை ஏற்பட்டுவிட்டது என்று வைத்துக் கொள்வோம், உடனடியாக இத்தொகுதியின் எம்எல்ஏ முதல்வரிடம் பேச வேண்டும் என்றால் அதிமுக ஆட்சியில் முதல்வரை சந்திக்க முடியுமா?

திமுக ஆட்சியில் முதல்வரிடம் பேசலாம். துணை முதல்வரிடம் பேசலாம். இருந்த இடத்தில் இருந்துகொண்டு கைபேசி மூலம் பேசி, நீங்கள் இங்கு வந்தால் தான் பிரச்சினை தீரும் என்று சொன்னால் இருவரும் ஓடோடி வருவார்கள. இது அதிமுக ஆட்சியில் நடக்குமா?

நாடாளுமன்றத்தில் திமுகவினர் சொந்தமாகவும், தைரியமாகவும் பேசலாம். ஏதாவது சந்தேகம் வந்தால் தலைவரிடம் கைபேசி மூலம் தொடர்புகொள்ளலாம். இது அதிமுகவில் நடக்குமா?

தமிழ்நாட்டில் 54 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதுபோல அனைத்து துறையிலும் ஏராளமான காலிப் பணியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கு திமுக அரசு தான் அமைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x