Published : 13 May 2016 08:52 AM
Last Updated : 13 May 2016 08:52 AM

தேர்தல் நாளன்று வங்கி ஊழியர்களுக்கு விடுமுறை வேண்டும்: ஊழியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

தேர்தல் நாளன்று வங்கி ஊழியர்களுக்கு விடுமுறை விட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு வங்கி ஊழியர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு கடிதம் அனுப்பியுள்ளது.

வங்கி ஊழியர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தமிழக தலைவர் டி.தாமஸ் ஃப்ரான்கோ ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் தனக்கான பிரதிநிதியை தேர்வு செய்யும் உரிமை உள்ளது. பொதுவாக தேர்தல் நாளன்று வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்படுவது வழக்கம். தனியார் நிறுவனங்களுக்கே சம்பளத்துடன் கூடிய விடுப்பு விட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

ஆனால், தமிழகத்தில் தேர்தல் நடக்கிற நாளான மே 16 அன்று வங்கிகளின் பணப் பரிவர்த்தனை மையங்கள் செயல்பட வேண்டும் என்று ஆர்பிஐ அறிவுறுத்தியுள்ளது. தேசிய பணப்பட்டுவாடா நிதி நிறுவனமும் தேர்தல் நாளன்று பணி நாளாக அறிவித்துள்ளது.

இதனால், வங்கி மற்றும் அரசு நிதி நிறுவன ஊழியர்கள் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்ற முடியாத நிலை உள்ளது. எனவே, இதில் நீங்கள் தலையிட்டு வங்கி ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x