Published : 13 Jul 2022 07:28 AM
Last Updated : 13 Jul 2022 07:28 AM

செஸ் ஒலிம்பியாட் போட்டி முன்னேற்பாடுகள்; ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம்: ஜூலை 20-ம் தேதிக்குள் பணிகளை முடிக்க உத்தரவு

மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் உள்ள விளையாட்டு வளாகத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான சிறப்பு ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் சதுரங்க பலகையில் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனுடன் சில நகர்வுகளை செய்தார். பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, ஆ.ராசா எம்.பி., உதயநிதி எம்எல்ஏ, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் வரும் 28-ம்தேதி நடக்கவுள்ள 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடந்தது. பணிகளை வரும் 20-ம் தேதிக்குள் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டி, ஃபோர்பாயின்ட்ஸ் என்ற நட்சத்திர விடுதியில் வரும் 28-ம் முதல் ஆகஸ்ட்10-ம் தேதி வரை நடக்க உள்ளது.இதில், 187 நாடுகளைச் சேர்ந்த2,500 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்தப் போட்டிக்காக சர்வதேச தரத்தில், 52 ஆயிரம் சதுரஅடிபரப்பில் நவீன விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், ஏற்கெனவே உள்ள 22 ஆயிரம் சதுரஅடி பரப்பிலான அரங்கம் நவீனப்படுத்தப்படுகிறது.

இதில் மொத்தம் 700 செஸ் போர்டு மேஜைகள் அமைக்கப்பட உள்ளன. இதேபோல, விடுதியின்அருகே வீரர்கள் மற்றும் பார்வையாளர்களின் வாகனங்களை நிறுத்த, 8 ஏக்கர் பரப்பில் வாகனநிறுத்துமிடம் அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக ஃபோர் பாய்ன்ட்ஸ் விடுதியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடந்தது.

அப்போது, செஸ் போட்டி தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைத்து, விளையாட்டு வீரர்கள் மற்றும்அமைப்பாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். போட்டியை பொதுமக்கள் கண்டு ரசிக்கும் வகையில், அரங்குகளில் டிஜிட்டல் போர்டுகள் அமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தினார்.

மேலும், பணிகளை விரைந்துமேற்கொண்டு, வரும் 20-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.

ஆய்வுக் கூட்டத்தில், அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், மெய்யநாதன், மதிவேந்தன், எம்.பி.க்கள் ஆ.ராசா, செல்வம், எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு, விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலர் அபூர்வா, சதுரங்க கூட்டமைப்புத் தலைவர் சஞ்சய் கபூர், மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக, செஸ் போட்டி நடைபெற உள்ள அரங்கம், வாகன நிறுத்துமிடங்களில் நடைபெற்று வரும் பணிகளை முதல்வர் ஆய்வு செய்த பின்னர், அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், முதல்வர் பணிகளைப் பார்வையிடாமல், நேரடியாக ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். திடீர் உடல் நலக் குறைவுகாரணமாக, நிகழ்ச்சிகள் மாற்றியமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x