Published : 02 May 2016 01:28 PM
Last Updated : 02 May 2016 01:28 PM

‘தமிழகத்துக்கு தேசியவாதம் பேசும் கட்சியின் ஆட்சி தேவை’- மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரச்சாரம்

கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக மத்திய தொழில் வர்த்தகத்துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் பிரச்சாரம் மேற்கொண்டார்.

கோவை டாடாபாத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

கடந்த 20 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் இருக்கும் மாநிலங்கள் பல மடங்கு வளர்ச்சியைக் கண்டுள்ளன. ஆனால் தமிழக மக்கள் கடினமாக உழைக்க கூடியவர்களாக இருந்தும் கூட, தமிழகம் தேக்க நிலையிலேயே இருந்து வருகிறது. தமிழகத்தில் முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டும், பெரிய அளவு முதலீடுகள் கிடைக்கவில்லை. தொழில்முனைவோர் தேவைக்கு மின்உற்பத்தி செய்யவும், கூடுதல் மின்சாரத்தை கொள்முதல் செய்யவும் தமிழக மின்வாரியத்திடம் கட்டமைப்பு இல்லை. தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் பணிகளும், திட்டங்களும் தேங்கிக் கிடக்கும் நிலையே காணப்படுகிறது.

கடந்த 2 ஆண்டுகளில் ஊழல் இல்லாத மத்திய அரசை பாஜக தலைமையிலான ஆட்சி கொடுத்துள்ளது. எனவே தமிழகத்தில் இரு திராவிட கட்சிகளுக்கும் பாஜக மட்டுமே மாற்றாக இருக்க முடியும். தமிழகத்துக்கு தேசியவாதம் பேசும் கட்சியின் ஆட்சி தேவைப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியில் தேசியவாதம் இல்லை. அக்கட்சி ஊழல் கட்சியாகவே இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘தமிழகத்தில் லோக் ஆயுக்தா கொண்டு வருவதற்காக பாஜக உறுப்பினர்கள் தமிழக சட்டப்பேரவையில் வலியுறுத்துவார்கள். அகஸ்டா வெஸ்ட் லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் நடதிருப்பது உண்மை என இத்தாலியில் நடைபெற்ற விசாரணையில் தெரியவந்துள்ளது. லஞ்சம் கொடுத்தவர்கள் அங்கு தண்டிக்கப்பட்டுள்ளனர். ஆனால் லஞ்சம் வாங்கியது யார் என்ற உண்மை வெளிவர வேண்டும். இந்த ஊழல் தொடர்பாக பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா 4 கேள்விகளை முன்வைத்துள்ளார். அந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் கடமை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு இருக்கிறது’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x