Published : 12 Jul 2022 01:40 PM
Last Updated : 12 Jul 2022 01:40 PM

கணக்கு வழக்குகளை வேறு யாரும் கையாள அனுமதிக்க கூடாது: வங்கிகளுக்கு ஓபிஎஸ் கடிதம்

சென்னை: "நான்தான் கட்சியின் பொருளாளர், எனவே வேறு யாரும் வரவு செலவு கணக்குகளை கையாள அனுமதிக்கக்கூடாது" என்று அதிமுக வரவு செலவு கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். மேலும், கட்சியின் சட்ட விதிகளுக்கு எதிராக செயல்பட்டதாககூறி, ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அவர் வகித்துவந்த பொருளாளர் பதவி, திண்டுக்கல் சீனிவாசனுக்கு வழங்கப்பட்டது.

அதிமுகவின் வரவு செலவு கணக்குகள் பேங்க் ஆஃப் இந்தியா, கரூர் வைஸ்யா வங்கிகளில் உள்ளன. கட்சியின் வரவு செலவு கணக்குகளை ஒப்படைக்கும்படி எடப்பாடி பழனிசாமி தரப்பில் வங்கிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வமும் வங்கிகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், "நான்தான் அதிமுகவின் பொருளாளர். என்னை கேட்காமல், வரவு செலவு கணக்குகளை யாரும் கையாள அனுமதிக்கக்கூடாது. தேர்தல் ஆணையத்தின் சட்ட திட்ட விதிகளின்படி நான்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்.

மேலும் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், என்னைக் கேட்காமல் கட்சியின் வரவு செலவு கணக்குகளை ஒப்படைக்ககூடாது. எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால், வங்கிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x