மதுராந்தகம் | அதிமுக பொதுக்குழுவுக்கு வந்த 2 பேர் விபத்தில் உயிரிழப்பு

மதுராந்தகம் | அதிமுக பொதுக்குழுவுக்கு வந்த 2 பேர் விபத்தில் உயிரிழப்பு
Updated on
1 min read

மதுராந்தகம்: திருவண்ணாமலை மாவட்டம் கொடுங்கலூர் கிராமத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட நபர்கள் சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக, வேனில் திருச்சி - சென்னை சாலை வழியாக நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரை அடுத்த சிறுநாகலூர் ரெட்டை ஏரிக்கரை அருகே சென்னையிலிருந்து திண்டிவனம் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த லாரி ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவே உள்ளே சென்டர் மீடியனில் ஏறிச் சென்று எதிரே வந்துக் கொண்டிருந்த வேன் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேல்மருவத்தூர் போலீஸார் காயமடைந்தவர்களை மீட்டு தனியார் மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைகளில் சேர்த்தனர். இதில், கொடுங்கலூர் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை(65), பரசுராமன்(40) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். விபத்து குறித்து மேல்மருவத்தூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in