Last Updated : 11 Jul, 2022 07:41 PM

 

Published : 11 Jul 2022 07:41 PM
Last Updated : 11 Jul 2022 07:41 PM

கோவையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு ரயில்கள்: மத்திய அமைச்சரிடம் வானதி கோரிக்கை

வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.,

கோவை: கோவையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு விரைவு ரயில்களை இயக்க வேண்டும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கடிதம் அனுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், ''கடந்த மார்ச் மாதம், டெல்லியில் தங்களைச் சந்தித்தபோது, கோவையிலிருந்து, தென் மாவட்டங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்ற பொதுமக்கள், வணிகர்கள், மாணவர்களின் கோரிக்கையை வலியுறுத்தினேன். தெற்கு ரயில்வேவுக்கு மூன்றாவது அதிக வருவாய் தரும் இடமாக கோவை உள்ளது. ஆனாலும், கோவையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு ரயில் சேவை போதுமானதாக இல்லை.

கோவையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு ரயில்கள் இயக்கக்கோரி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏழு பேர், எம்எல்ஏக்கள் ஆறு பேர், 190 வணிகர், சமூக சங்கங்கள் உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கையெழுத்திட்டு கோரிக்கை விடுத்துள்ளனர். ரயில் சேவை கோரி 20 கிராம ஊராட்சிகள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கோவையிலிருந்து, திருச்செந்தூர், தூத்துக்குடி, ராமேஸ்வரம், மதுரைக்கு விரைவு ரயில் சேவையும், கோவையிலிருந்து திண்டுக்கல்லிற்கு பயணிகள் ரயில் சேவையும் உடனடியாக தொடங்கப்பட வேண்டும். இது கோவை பகுதி மக்களும், தென் மாவட்ட மக்களுக்கும் பெரிதும் பயனுள்ளதாக அமையும். எனவே, ரயில் சேவைகள் தொடங்க ரயில்வே அமைச்சரான தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை-பெங்களூரு விரைவு சாலை

மேலும், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு வானதி சீனிவாசன் அனுப்பியுள்ள கடிதத்தில், "கோவை - பெங்களூரு நெடுஞ்சாலையை விரைவுச் சாலையாக விரிவுப்படுத்த வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை தங்களின் கவனத்திற்கு கொண்டு வர வரும்புகிறேன். விரைவுச் சாலையாக மாற்றுவதன் மூலம், கோவை - பெங்களூரு இடையேயான தூரத்தை 300 கி.மீ. ஆகவும், பயண நேரத்தை ஐந்து மணி நேரமாகவும் குறைக்க முடியும்.

இதனால், கோவை மக்கள் பயனடைவார்கள். கோவை - பண்ணாரி நெடுஞ்சாலை முதல் கட்டமாக 96 கி.மீ. தூரத்திற்கு விரைவுச் சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த விரைவுச்சாலை திட்டத்தின் இரண்டாவது கட்டம், பண்ணாரியில் இருந்து சாம்ராஜ்நகர் வரையிலான சாலை, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் வழியாக செல்கிறது. எனவே, இந்தப் பகுதியில் வன விலங்குகள் பாதுகாப்பாக செல்ல வசதியாக, உயர் மட்ட ரயில் பாதை, சாலைகளை அமைக்கலாம்.

மூன்றாவது கட்டமாக, சாம்ராஜ்நகரில் இருந்து, மலவல்லி மற்றும் கனகபுரா வழியாக, 160 கி.மீ., 6 வழிச்சாலை அமையவுள்ளது. இது தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், சர்க்கரை ஆலைகள் என தொழில் வளர்ச்சிக்கும், விவசாயத்திற்கு பலனளிக்கும். எனவே, இந்த விரைவுச் சாலை திட்டங்களை விரைவாக முடிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x