

கோவை: கோடநாடு கொலை, கொள்ளைவழக்கு தொடர்பாக தொழிலதிபரின் உதவியாளரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில் அங்கு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இந்த வழக்கு தற்போது மீண்டும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
கோடநாடு எஸ்டேட்டில் கொள்ளை போன ஆவணங்கள், தொழிலதிபர் செந்தில்குமாரின் வீட்டில் வருமான வரித்துறையினரால் கண்டெடுக்கப்பட்டது குறித்து, கோவையைச் சேர்ந்த தொழிலதிபர்களான ஓ.ஆறுமுகசாமி, அவரது மகன் செந்தில்குமார் ஆகியோரிடம் போலீஸார் கடந்த இரண்டு நாட்களாக விசாரணை நடத்தினர்.
அதன் தொடர்ச்சியாக நேற்று செந்தில்குமாரின் உதவியாளர் பழனிசாமியிடம் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது செந்தில்குமார் தெரிவித்த தகவல்களின் உண்மைத் தன்மை குறித்தும், ஆவணங்கள் அவரது வீட்டில் கைப்பற்றப்பட்டது குறித்தும் பழனிசாமியிடம் போலீஸார் விசாரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.