Published : 17 May 2016 09:42 AM
Last Updated : 17 May 2016 09:42 AM

தமிழக மீனவர்கள் 34 பேரை விடுதலை செய்ய இலங்கை அரசு உத்தரவு

இலங்கை சிறைகளில் அடைக் கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 34 பேரை விடுதலை செய்ய அந்நாட்டு அரசு பரிந்துரை செய்துள்ளது.

இலங்கை கடற்படையினர் கடந்த மார்ச் மாதம் முதல் வெவ்வேறு மூன்று சிறை பிடிப்புகள் மூலம் ராமேசுவரம், பாம்பன், நாகப்பட்டினம் மீன வர்கள் 21 பேரை கைது செய்து வவுனியா, யாழ்ப்பாணம் சிறைகளில் அடைத்தனர். இவர் களை விடுதலை செய்ய வலியுறுத்தி பாம்பன், தங்கச்சி மடம் மீனவர்கள் உண்ணாவிரதம், கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்நிலையில், டெல்லி வந்த இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை இரவு விருந்து அளித்தார். அப்போது தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் குற்றம்சாட்டி இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவது குறித்து இந்திய தரப்பின் கவலையை சிறிசேனாவிடம் மோடி தெரிவித்தார். மேலும் சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தினார்.

இதை ஏற்று இலங்கை சிறைகளில் உள்ள 34 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு நீதிமன்றங்களுக்கு அந்நாட்டு அரசு திங்கட்கிழமை பரிந்துரை செய்தது. ஆனால் கைப்பற்றப்பட்ட விசைப்படகுகள், நாட்டுப்படகுகளை விடுவிக்க இலங்கை அரசு மறுத்துவிட்டது.

இதைத் தொடர்ந்து வவுனியா சிறையில் அடைக்கப்பட்டிருந்த தங்கச்சிமடத்தைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் 21 பேர் மன்னார் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். மீதம் உள்ள 13 மீனவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x