

சென்னை: தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்யும் பொருட்டு விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
வரப்பெற்ற விண்ணப்பங்கள் 7 உறுப்பினர்களை கொண்ட குழுவால் பரிசீலிக்கப்பட்டது. பின்னர், அக்குழு தேர்வு செய்து பரிந்துரைத்துள்ள நபர்களின் பட்டியலை இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அரசுக்கு அனுப்பியுள்ளார்.
பட்டியலை அரசு கவனமுடன் பரிசீலித்து, பொட்டிபட்டி விஜயகுமார் ரெட்டி, ரஞ்சினி மணியன், திருநாவுக்கரசு, ஆறுமுகம், மருதமுத்து ஆகிய 5 பேரை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களாக நியமனம் செய்து ஆணை வெளியிட்டது.
இந்த ஆணை வெளியிடப்படும் நாளில் இருந்து 30 நாட்களுக்குள் அறங்காவலர்கள் தங்களுக்குள் ஒரு தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். நியமனம் செய்யப்படும் அறங்காவலர்கள், தமிழ்நாடு இந்து சமய அறநிலையக் கொடைகள் சட்டத்தின் சட்டப்பிரிவு 47(3)-ன்படி அறங்காவலர் குழுத்தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் நாளில் இருந்து 2 ஆண்டு காலம் பதவி வகிப்பார்கள். இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலுக்கும் 5 பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.