Last Updated : 08 Jul, 2022 03:32 PM

 

Published : 08 Jul 2022 03:32 PM
Last Updated : 08 Jul 2022 03:32 PM

உயர் படிப்புக்காக சென்டாக் மாணவர் சேர்க்கை; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் நமச்சிவாயம்

புதுச்சேரி: புதுச்சேரியில் 2022-23ம் ஆண்டு நீட் அல்லாத தொழில்முறை படிப்புகளுக்கு இன்று முதல் வரும் 20ம் தேதி வரை சென்டாக் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.

புதுச்சேரி கல்வித்துறை வளாகத்தில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் கல்லுாரிகளில் சேர்வதற்கான ஒருங்கிணைந்த சேர்க்கை (சென்டாக்) இணையதள விண்ணப்பம், கையேடு வெளியீடு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் விண்ணப்பம், கையேடை வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது: "புதுச்சேரியில் 2022-23ம் ஆண்டு நீட் அல்லாத தொழில்முறை படிப்புகளுக்கு இன்று முதல் வரும் 20ம் தேதி மாலை 5 மணிக்குள் சென்டாக் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த ஆண்டு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இடம் கிடைக்கும். தற்போது 10 ஆயிரத்து 804 இடங்கள் உள்ளன. தேவை ஏற்பட்டால் கூடுதல் இடங்கள் ஏற்படுத்தப்படும். பிற மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் நீட் அல்லாத படிப்புகளுக்கு மற்ற மாநில ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்கலாம். என்ஆர்ஐ, பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். மாணவர்களிடம் புதிதாக சாதிச் சான்றிதழ் கேட்க கூடாது.

பழைய சான்றிதழ் இருந்தால் போதும் என கல்வித்துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. இடம் கிடைத்தவர்கள் குடியிருப்பு சான்றிதழை புதிதாக அளிக்க வேண்டும். மாணவர் சேர்க்கை ஆன் லைன் மூலமாகவே நடக்கும். சென்டாக் அலுவலகம் காமராஜர் மணிமணிமண்டபத்துக்கு மாற்றப்படும். இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை பணி காமராஜர் மணி மண்டபத்தில் நடக்கும்.

போராட்டம் நடத்தும் பேராசிரியர்களின் சில கோரிக்கைகள் ஏற்கக்கூடியது. சில ஏற்க முடியாதது. நிர்வாகத்தை நிர்பந்திக்கும் வகையில் போராட்டம் நடத்தக்கூடாது. பேராசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். உயர் கல்வியில் அரசு கல்லூரிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க உறுதியான நடவடிக்கை எடுப்போம். ஒழுக்கக்கேடாக நடந்துகொள்ளும் பள்ளி ஆசிரியர்கள், முதல்வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மகளிர் தொழில்நுட்ப கல்லுாரி தொடங்க நிர்வாக ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். ஒரே இடத்தில் அதிக ஆண்டுகள் பணிபுரிந்தோரை இடமாற்றம் செய்வதை கண்டிப்பாாக பரிசீலிப்போம்" என்று அமைச்சர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x