Published : 07 Jul 2022 05:04 PM
Last Updated : 07 Jul 2022 05:04 PM

“அண்ணா பல்கலை. தேர்வில் தோல்வியுற்ற 68% மாணவர்களுக்கு சிறப்புத் தேர்வு ஏற்பாடு செய்க” - தமாக யுவராஜா

சென்னை: கரோனா பரவல் காரணமாக பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதாமல் தேர்ச்சிப் பெற்று, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து, முதலாம் ஆண்டு தேர்வெழுதிய 1.2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணாக்கரில் 62 சதவீதம் பேர் தோல்வி அடைந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று தமாக இளைஞரணித் தலைவர் யுவராஜா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. கரோனா பரவலால் கடந்த கல்வியாண்டில் கல்லூரிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டது. முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவர்களுக்கு நவம்பரில் தான் வகுப்புகள் தொடங்கின. இதனால் பருவ தேர்வு மார்ச் - ஏப்ரல் மாதங்களில் நேரடியான முறையில் நடத்தப்பட்டது. சுமார் 1.2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களில் 38% சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் 62% பேர் தோல்வியை சந்தித்துள்ளதாகவும் வெளியாகி உள்ள தகவல் அதிர்ச்சியளிக்கிறது.

முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவர்கள் அதற்கு முந்தைய ஆண்டு கரோனா பரவலால் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதவில்லை. பிளஸ் 2 வகுப்புகளிலும் பாடங்கள் முழுமையாக நடத்தப்படவில்லை. அனைவரும் தேர்ச்சி செய்யப்பட்டு முந்தைய வகுப்புகளின் செயல்பாடுகள் அடிப்படையில் இறுதி மதிப்பெண் வழங்கப்பட்டது. அதன் மூலம் பொறியியல் படிப்பு சேர்ந்த மாணவர்கள் என்பதால் பாடங்களை புரிந்து கொள்ள பெரிதும் சிரமப்பட்டனர் குறிப்பாக கணித பாடத்தில்தான் பெரும்பாலான மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகம் தற்போது மாணவர்களின் நலன் கருதி சிறப்பு தேர்வினை அறிவித்து தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் மூலம் தேர்ச்சிக்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்திட வேண்டும். ஒரு மாணவன் பருவத் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் அடுத்த ஆண்டுக்கான வங்கி கடன் பெற்று பொறியியல் படிப்பை தொடர முடியாத சூழ்நிலை ஏற்படும். அவர்கள் உயர் கல்வி பெறுவது கேள்விக்குறியாகிவிடும்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் குறைவான தேர்ச்சி விகிதத்தை காணும்போது மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கு தயக்கம் காட்டுவார்கள். மேலும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் மாணவர்கள் அதிக அளவில் சேர்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. கிராமப்புற மாணவர்கள் பொறியியல் சேர்க்கையில் ஏற்கெனவே குறைவான அளவு சேர்ந்து வருகின்றனர்.

இம்மாதிரியான தேர்ச்சி விகிதத்தில் மாணவர்களின் பொறியியல் கனவு பாதிக்கப்படும். இனிவரும் காலங்களில் தேர்ச்சி சதவீதம் 50 சதவீதத்திற்கு கீழ் குறையும் போது குறிப்பிட்ட பாடப்பிரிவில் சிறப்பு வகுப்புகளை ஏற்பாடு செய்து உடனடியாக தேர்வு நடத்தி அந்த மாணவர்களின் தேர்ச்சியை தமிழக அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x